10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு.. நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மும்பை: மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்த நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் மதம், மூடநம்பிக்கை, சாதி பாகுபாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் குறி வைத்து கொல்லப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த புகார்களை மெய்ப்பிக்கும் வகையில் நடந்ததுதான் தபோல்கர் கொலை. கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் என அடுத்தடுத்து நடந்த கொலைகளுக்கு தொடக்க புள்ளியாக தபோல்கர் கொலை சம்பவம் இருந்தது.

மகாராஷ்டிராவில் பிறந்த தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவராவார். 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றிய இவரை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நோக்கி அம்மாநில அரசியல் நகர்த்தியது. பாஜகவும், சிவசேனாவும் நிரம்பி வழிந்த மராட்டியத்தில் ஏராளமான சாதிய, மத பாகுபாடுகள் தலை தூக்கியிருந்தன. எனவே இவர் மருத்துவ பணியை கைவிட்டுவிட்டு இவற்றை ஒழிக்கும் பணியில் இறங்கினார்.
குறிப்பாக ஒரு கிராமத்தில் ஒரு கிணறுதான் இருக்க வேண்டும், அது பொது கிணறாகதான் இருக்க வேண்டும் என்று இவர் வைத்த முழக்கம் மகாராஷ்டிராவில் பரவலாக எதிரொலித்தது. தனது போராட்டத்தில் உறுதியாக இருந்த தபோல்கர், 1989ம் ஆண்டு 'மூடநம்பிக்கை எதிர்ப்பு' இயக்கத்தை தொடங்கினார். இவருக்கும், பாலியல் வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவின் குழுவினருக்கும் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.
தவிர பல இந்துத்துவ, வலதுசாரி குழுக்களும் இவருடன் அடிக்கடி பஞ்சாயத்து செய்து வந்தது. இப்படி இருக்கையில், 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அவர் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பைக்கில் வந்த இரண்டு பேர் இந்த கொலையை செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கை புனே காவல்துறை விசாரிக்க தொடங்கியது. ஆனால் வழக்கு உயர்மட்ட அளவில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் மும்பை உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு, வழக்கு 2014ல் சிபிஐ வசம் சென்றது. அதன் பின்னர் விசாரணை சூடு பிடிக்க தொடங்கியது. பலர் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக மருத்தவரான விரேந்திர சிங் தவடே என்பவர் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டார். இவர் 'சனாதன் சன்ஸ்தா' எனும் அமைப்பை நடத்தி வருகிறார். கோவாவிலிருந்து இயங்கும் இந்த அமைப்பு, மத போதனை கூட்டங்களை நடத்துவது, தனிமனித மத நம்பிக்கைகளை கடைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறது. சிபிஐ இவர் மீது குற்றம் சாட்டியிருந்தாலும், அதனை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.
அதன் பின்னர் 2018ம் ஆண்டு இந்துத்துவ ஆதரவாளர்களான சச்சின் அன்டுரே மற்றும் ஷரத் கலாஸ்கர் என இரண்டு பேரை சிபிஐ கைது செய்தது. இவர்கள் இருவர்தான் தபோல்கரை சுட்டனர் என்று கூறி 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதேபோல இந்த கொலையாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இப்படியாக 5 பேரை சிபிஐ குற்றவாளிகளாக காட்டியது. இவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தா எனும் அமைப்புடன் தொடர்புடையவர்கள்.
எனவேதான் முக்கிய குற்றவாளியாக விரேந்திர சிங் தவடேவை சிபிஐ கூறியிருந்தது. சிபிஐ வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, சச்சின் மற்றும் சரத் கலஸ்கர் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. வீரேந்திர சிங் தவடே உட்பட மூவர் உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications