தோல்விக்கு காரணம் பாஜக! அந்த வார்த்தைதான் பிரச்சினை? சீண்டிப் பார்த்த ஏக்நாத்ஷிண்டே
மும்பை: பாஜக கட்டமைத்த 400க்கும் மேல் என்ற கோஷம் தான் என்.டி,ஏ கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கக் காரணம் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஏனென்றால், 2019 தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் மொத்தம் 23 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், இந்த 2024 தேர்தலில் அதில் பாதியைக் கூட இந்தக் கட்சி பெறவில்லை. வெறும் 9 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சி கடந்த முறை ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. இந்த முறை 13 தொகுதிகளை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.
நிதின்கட்கரி போன்ற பாஜக தேசிய தலைவர் இந்த மாநிலத்திலிருந்தும் பாஜக இந்தத் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதற்குக் காரணம் பாஜக இம்மாநிலக் கட்சிகளான சிவசேனாவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்ததுதான்.
அதன் விளைவாக இந்த முறை உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை வென்றுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதிகளையும் அஜித்பவரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில்தான் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் அஜித்பவாரும் உள்ளனர். 7 தொகுதிகளை வைத்துள்ள அவரது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை.
அதைவிடக் குறைவாக 2 சீட்டுகளை வைத்துள்ள மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்டி குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், ஏக்நாத்ஷிண்டேவும் அஜித்பவாரும் பாஜக மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிட்ண்டே பாஜகவுக்கு எதிரான ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதாவது இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக '400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்ற கோஷத்தை முன்வைத்ததன் மிகப்பெரிய பின்னடைவை உண்டாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

"பாஜக 400க்கும் மேல் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்து பிரச்சாரத்தை முன்வைத்தது. அதை எதிர்க்கட்சிகள் இவ்வளவு பெரும்பான்மை அந்தக் கட்சிக்குக் கிடைத்தால், அரசியல் சாதனத்தை மாற்றி அமைத்துவிடுவார்கள்.
இதனால், நாட்டின் அரசியலமைப்பு சிதைந்துவிடும் என்று பேசினர். அதை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆகவேதான் இந்த பின்னடைவு ஏற்பட்டது.
ஒட்டுமொத்தமாக பாஜக தேசிய அளவில் இந்தக் கோஷத்தை முன்வைத்தது. ஆனால், சில மாநிலங்களில் இந்த வாதம் எடுபடவில்லை. அது நேரெதிரான பின்னடைவு ஏற்படுத்தியது.
கடைசியில் பாஜகவால் 300 ஐ கூட முழுமையாகத் தாண்ட முடியவில்லை. இதை மகாராஷ்டிர மாநில மஹாயுதி கூட்டணி எதிர்பார்க்கவில்லை. ஆகவே நாங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை" என்று பேசியுள்ளார்.
இந்தப் பேச்சு அம்மாநில பாஜக தொண்டர்களை உரசிப் பார்ப்பதாக அமைந்துள்ளது என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
பாஜகவின் தோல்வியைப் பற்றி பேசிய ஷிண்டே, "கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வே எடுக்காமல் பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ஆனால், நடந்தது என்ன?
இந்த 400க்கு மேல் என்ற வாதத்தால் பின்னடைவைச் சந்தித்தோம். அரசியலமைப்பு மாற்றப்படும், இடஒதுக்கீடு பறிபோகும் என எதிர்க்கட்சிகள் சொன்னதால் வெற்றி பறிபோனது. அதற்கு முதல் காரணம் இந்த 400தான்.
விவசாயிகள் பிரச்சினை வடமாநிலங்களில் பாஜக வெற்றியைப் பதித்துள்ளது. பயிர்களுக்கு ஆதரவு விலை கேட்டு அவர்கள் போராடி வருகின்றனர். அது குறித்துப் பேசிய ஷிண்டே, "இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிதான் நமக்கு உணவு வழங்குகிறார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் யாரும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது.
எனவே விரைவில் மத்திய விவசாய அமைச்சரைச் சந்தித்து வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ் ஆகிய வேளாண் உற்பத்தி பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யச் சொல்லி வலியுறுத்துவோம்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications