தெலுங்கானாவை தொடர்ந்து மகாராஷ்டிரா... எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைக்க எலான் மஸ்க்குக்கு அழைப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைக்க அதன் நிறுவனர் எலான் மஸ்க்குக்கு அம்மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகில் அதிநவீன எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவிலும் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்ய எலான் மஸ்க் முயற்சித்து வருகிறார்.

ஆனால் எலான் மஸ்க்கின் வரி குறைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் இருக்கிறது. இது தொடபாக கடந்த ஆண்டு ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டும் இருந்தார்.
இதனால் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ட்விட்டரில் எலான் மஸ்க்கிடம் பிரனாய் பத்தோல் என்பவர், இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும் என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த எலான் மஸ்க், இந்திய அரசுடன் பல சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு தெலுங்கானா அமைச்சர் கே..டி.ராமராவ், இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது; இந்தியாவில் வர்த்தகம் செய்ய தெலுங்கானா சிறந்த மாநிலம் என குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலமும் எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெயந்த் பாட்டீல் தமது ட்விட்டர் பக்கத்தில், டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க மகாராஷ்டிரா மாநில அரசு தேவையான உதவிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications