சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா களம்.. அஜித்பவாரை எதிர்த்து தம்பி மகன் போட்டி.. சரத்பவாரின் சபாஷ் பிளான்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரை எதிர்த்து அவரது தம்பி மகன் யுகேந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி (மகாயுதி) ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே இருந்து வருகிறார்.

மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் அணி தேசியவாத காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதி பங்கீடு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில்ஆளும் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளும் மாறி மாறி வியூகம் வகுத்து வந்தன.
இந்த நிலையில் பாஜக முதலில் தொகுதி பங்கீடை நிறைவு செய்தது மட்டுமின்றி வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. அதன்படி பாஜக 99 இடங்களில், சிவசேனா 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சி 38 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதி பங்கீடை நிறைவு செய்ய தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பெரிய கட்சிகளான காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகளுக்கு சரிசமமாக 85 தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. 3 கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிவசேனாவில் முதல்கட்ட வேட்பாளர்கள் லிஸ்டையும் வெளியிட்டது. 65 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே பெயரும் இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: முன்னாள் அமைச்சரான ஆதித்ய தாக்கரே மும்பை ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 48 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே சகோலி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான் காரட் தொகுதியிலும், ஜோதி கெய்க்வாட் மும்பை தாராவி தொகுதியிலும் போட்டியிருகிறார்க.
தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) வேட்பாளர் பட்டியல்: இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சார்பிலும் முதல்கட்டமாக 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், சரத்பவார் பேரன் ரோகித் பவார், பாராமதி தொகுதியில் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார்.
பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித்பவார் களம் காணும் நிலையில், அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சார்பில் அஜித்பவாரின் தம்பி மகன் யுகெந்திர பவார் போட்டியிடுகிறார். பாராமதி தொகுதியில் 8 முறை போட்டியிட்டு அஜித் பவார் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 29 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய கட்சிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications