மகாராஷ்டிரா: 2,938 பேர் வேட்பு மனுக்கள் வாபஸ்- 288 தொகுதிகளில் 4,140 வேட்பாளர்கள் போட்டி!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 2,938 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனையடுத்து மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் இறுதியாக 4,140 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் கூட்டணியின் அதிருப்தி வேட்பாளர்கள் பலரும் நேற்று தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 288 தொகுதிகளில் நவம்பர் 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 29-ந் தேதி நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசிநாள்.

இதுவரை இல்லாத வகையில் மிக அதிகபட்சமாக 7,078 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். காங்கிரஸ், பாஜக கூட்டணிகளில் சீட் கிடைக்காத பலரும் அதிருப்தி வேட்பாளர்களாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது 921 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நேற்று கடைசி நாள் என்பதால் பாஜக, காங்கிரஸ் கூட்டணியின் தலைவர்கள், அதிருப்தி வேட்பாளர்களுடன் இறுதி கட்ட சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், அதிருப்தி வேட்பாளர்களுக்கு எம்.எல்.சி, வாரிய பதவிகள் தரப்படும் என வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டன. இதனையடுத்து 2,938 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
நாந்தெட் போகர் சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மகன் ஶ்ரீஜெயா சவனுக்கு பாஜக சீட் கொடுத்தது. இந்த தொகுதியில் 140 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நேற்று 115 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனையடுத்து இந்த தொகுதியில் தற்போது 25 பேர் களத்தில் உள்ளனர்.
இறுதியாக 288 தொகுதிகளில் 4,140 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை விட 28% இது அதிகமாகும். மஜல்காவ் என்ற தொகுதியில் அதிகபட்சமாக 34 பேரும் மிக குறைந்தபட்சமாக நந்துர்பரில் 3 பேரும் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications