ஹரியானாவில் வாங்கிய அடி அப்படி..மகாராஷ்டிராவில் களையெடுக்கும் காங்கிரஸ்.. எம்எல்ஏ அதிரடி டிஸ்மிஸ்!
மும்பை: ஹரியானாவில் பெரும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா தேர்தலில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக உட்கட்சி மோதல் விவகாரங்களில் களையெடுப்பைத் தொடங்கி உள்ளது. காங்கிரஸுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்த அமராவதி எம்.எல்.ஏ. சுல்பா கோட் அதிரடியாக அக்கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் வெளியிடக் கூடும். மகாராஷ்டிராவில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்முரமாக களமிறங்கிவிட்டன.

மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் களத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது பாபா சித்திக் படுகொலை.
இதனிடையே மகாராஷ்டிரா தேர்தலில் கவுரவமான இடங்களைப் பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக களமிறங்கிவிட்டது. ஹரியானா சட்டசபை தேர்தலில் மிதமிஞ்சிய நம்பிக்கையில் மிதந்ததால் கிடைத்த மரண அடியில் இருந்தே காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா, மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய ரமேஷ் சென்னிதாலா கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி கொடுக்கவும் வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்தது.
தற்போது ரமேஷ் சென்னிதாலா கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் அமராவதி எம்.எல்.ஏ. சுப்லா கோட் அக்கட்சியில் இருந்தே அதிரடியாக 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தவர் சுப்லா கோட். ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்து வந்தது. தற்போது ஹரியானாவில் விழுந்த அடியைத் தொடர்ந்து கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு கட்சிக்குள்ளேயே வலம் வருவோரை களையெடுக்கத் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications