மகாராஷ்டிரா: பாராமதி தொகுதியில் 'பெரியப்பா' அஜித் பவாரை எதிர்த்து களமிறங்கும் 'மகன்' யுகேந்திர பவார்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் போட்டியிடுகிறார். அஜித் பவாரை எதிர்த்து அவரது அண்ணன் மகன் யுகேந்திர பவார், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க இருப்பதால் பாராமதி தொகுதியில் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. லோக்சபா தேர்தலில் பாராமதி தொகுதியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவும் அஜித் பவாரின் மனைவியும் போட்டியிட்ட நிலையில் சுப்ரியா சுலே வென்றிருந்தார்.
மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதி சரத் பவார் குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது.. பாராமதி தொகுதியை சரத் பவாரிடம் இருந்து கைப்பற்ற அஜித் பவார் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

லோக்சபா தேர்தலில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித் பவார், மனைவி சுனேத்ரா பவாரை களமிறக்கினார். ஆனால் சுப்ரியா சுலே, 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் பாராமதி தொகுதி கவனம் பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலில் பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவார் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அஜித் பவாருக்கு எதிராக சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக யுகேந்திர பவார் போட்டியிட உள்ளார். கடந்த சில மாதங்களாகவே யுகேந்திர பவர், பாராமதி தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொண்டும் வருகிறார்.
அஜித் பவாரை எதிர்த்து களமிறங்கும் யுகேந்திர பவாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அஜித் பவாரின் அண்ணன் சீனிவாஸ் பவாரின் மகன்தான் யுகேந்திர பவார். தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த போது 'தாத்தா' சரத் பவார் பக்கம் நின்றுவிட்டார் யுகேந்திர பவர். தற்போது பெரியப்பா அஜித் பவாரை எதிர்த்து போட்டியிடவும் தயாராகிவிட்டார். லோக்சபா தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட அத்தை சுப்ரியா சுலேவுக்காக தீவிரமாக தேர்தல் பணியாற்றிய அனுபவத்துடன் யுகேந்திர பவர் 'யுத்தத்துக்கு' தயாராகிவிட்டார் என்கின்றன தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications