பத்தல பத்தல 230 இடங்களும் பத்தல- மகாராஷ்டிராவில் பாஜக அணிக்கு தாவி ஓடும் காங்கிரஸ் அணி எம்எல்ஏக்கள்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள், மகாயுதி கூட்டணிக்கு தாவி ஓட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகள் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றியது. மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் மகாயுதி கூட்டணி மகத்தான சாதனையைப் படைத்துள்ளது.

தற்போது மகாயுதி கூட்டணியில் முதல்வர் பதவி, அமைச்சர் பதவிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவோம்; ஆட்சியையே கைப்பற்றலாம் என நம்பிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. இத்தகைய மிக மோசமான தோல்வியை அந்த கூட்டணி எதிர்பார்க்கவும் இல்லை. மகாராஷ்டிரா சட்டசபையில் தற்போது பிரதான எதிர்க்கட்சியே இல்லாத நிலைமை உருவாகி உள்ளது.
இதனிடையே மகா விகாஸ் அகாடிக்கு அடுத்த பேரிடியாக இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் விரைவில் பாஜகவின் மகாயுதி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தாவ இருக்கின்றனராம். அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் கொத்து கொத்தாக கட்சி தாவ திட்டமிட்டுள்ளனராம்.
இது தொடர்பாக அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடா அனில் பாட்டீல் கூறுகையில், அடுத்த சில மாதங்களில் மகா விகாஸ் கூட்டணியின் எம்.எல்.ஏக்கள், மகாயுதி கூட்டணிக்கு தாவ இருக்கின்றனர். மகா விகாஸ் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என்ன முடிவு செய்துவிட்டனர். இதனால் மகா விகாஸ் அகாடி கட்சிகளை விட்டு தாவுவது என எம்.எல்.ஏக்கள் முடிவு செய்திருக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications