பாஜக எம்எல்ஏ போலீஸ் நிலையத்தில் புகுந்து சரமாரி துப்பாக்கி சூடு.. ரத்த வெள்ளத்தில் சிவசேனா நிர்வாகி
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் போலீஸ் நிலையத்திலேயே வைத்து ஷிண்டே தரப்பு சிவசேனா தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை இப்போது அங்கே கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜக- ஷிண்டே தரப்பு சிவசேனா- அஜித் பவார் தரப்பு என்சிபி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது.

இதற்கிடையே மும்பை அருகே நேற்று இரவு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவின் நகரத் தலைவரை பாஜக எம்எல்ஏ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா: துப்பாக்கிச் சூடு நடத்திய பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், சிவசேனாவின் மகேஷ் கெய்க்வாட் என்பவர் மீது இவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதிலும் மும்பை அருகே போலீஸ் நிலையத்திலேயே வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளது பகீர் கிளப்புவதாக இருக்கிறது. நிலத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
மும்பையில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள கல்யாண் கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இந்த கணபத் கெய்க்வாட் இருக்கிறார். மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணியில் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 2 பேர் காயமடைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
நிலத் தகராறு: நிலத் தகராறு தொடர்பாக இரு தரப்பினரும் அங்குள்ள உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர், அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த பாஜக எம்எல்ஏ மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டுள்ளார். பாய்ந்ததாகத் தெரிகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சிவசேனா தலைவர் மற்றும் மற்றொரு நிர்வாகி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுவரை சிவசேனா நிர்வாகி உடலில் இருந்து 5 தோட்டாக்கள் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கண்பத் கெய்க்வாட் போலீஸ் பிடியில் இருக்கிறார். மகேஷ் கெய்க்வாட் தனது நிலத்தை ஆக்கிமித்தாகவும் இதனால் ஏற்பட்ட தகராற்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று அந்த பாஜக எம்எல்ஏ கண்பத் தெரிவித்துள்ளார். தனது மகனைத் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காகச் சுட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் சொல்வது என்ன: இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "மகேஷ் கெய்க்வாட் மற்றும் கண்பத் கெய்க்வாட் நில தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாகப் புகார் வரவே இருவரும் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர், ஆனால் பேச்சுவார்த்தையின் போது மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கன்பத் கெய்க்வார்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்" என்றார்.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவில் பேசுபொருள் ஆகியுள்ளது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியினர், இந்த விவகாரம் தொடர்பாக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளனர். இது குறித்து உத்தவ் தாக்கரே தரப்பினர் கூறுகையில், "பாஜக எம்எல்ஏ ஒருவர் போலீஸ் நிலையத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்.
முதல்வருக்கு நெருக்கமான நபர் இதில் படுகாயமடைந்துள்ளார். இருவருமே ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள். இவர்களுக்குச் சட்டத்தின் மீது பயம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சட்ட ஒழுங்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை" என்று சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications