26/11 பாணியில் தாக்குதல் சதி? மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கிகளுடன் சிக்கிய மர்ம வெளிநாட்டு படகு
மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம படகு ஒன்று பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் பாணியில் பயங்கரவாதிகள் மற்றொரு தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தனரா? என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
Recommended Video
2008-ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்தியாவின் வர்த்த தலைநகர் மும்பை, 1993-ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான தாக்குதலை எதிர்கொண்டது. பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர். 4 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த தாக்குதல்களில் மொத்தம் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த பின்னணியில் மும்பையில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள ராய்காட் கடற்பரப்பில் மர்ம படகு ஒன்று பிடிபட்டது. அந்த மர்ம படகில் சோதனை நடத்தப்பட்டதில் பயங்கர ஆயுதங்கள், பல முக்கியமான ஆவணங்கள் இருந்தது அதிரவைத்தது. மும்பை பாணியில் மற்றொரு பயங்கரவாத தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் வகுத்துள்ளனரா? என்கிற சந்தேகமும் எழுந்தது.
மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் வினீத் அகர்வால் கூறுகையில், ராய்காட்டில் பிடிபட்ட படகுகளுக்கும் பயங்கரவாதிகளுக்குமான தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம். பிடிபட்ட படகு ஓமனில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது என்றார். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்தும் வருகிறது. இதனிடையே மர்ம ஆயுதப் படகு பிடிபட்டது தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.
மர்ம படகு பிடிபட்டது தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த படகு குறித்து மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அப்படகு 16 அடி நீளம் கொண்டது. அந்த படகில் இருந்து 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இப்படகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு இப்படகு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
ஐரோப்பா நோக்கி சென்ற படகு உடைந்ததால் நடுக்கடலில் கைவிடப்பட்டிருக்கிறது. மத்திய விசாரணை ஏஜென்சிகளுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.