மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷிண்டே விரைவில் தகுதி நீக்கம்-அஜித் பவார் புதிய முதல்வர்-உத்தவ் சிவசேனா ஆரூடம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 16 எம்.எல்.ஏக்கள் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவர்; இதனையடுத்து மாநிலத்தின் புதிய முதல்வராக தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டியின் அஜித் பவார் பதவியேற்பார் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூறியுள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் அஜித் பவார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்தில் இணைந்துள்ளனர். அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 9 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸின் 53 எம்.எல்.ஏக்களில் 40 பேர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கட்சியின் பெயரும் சின்னமும் தங்களுடையதுதான் என்கிறார் அஜித்பவார். ஆனால் பாஜக அரசில் இணைந்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை சரத்பவார் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விரைவில் மாற்றப்படுவார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு 16 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். அப்படியான நிலையில் அஜித் பவார் புதிய முதல்வராக்கப்படுவார். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
ஆனால் இதனை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஷிண்டே கூறுகையில், என்னுடைய அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என தொடர்ந்து ஆரூடம் கூறி வருகின்றனர். இப்போது அஜித் பவார் தலைமையிலான எம்.எல்.ஏக்கள், அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் கடும் விரக்தி அடைந்துள்ளனர். இத்தகைய ஜோதிடர்களுக்குதான் நல்ல அறிவுரைகள் தேவைப்படுகின்றன என்றார்.
இதனிடையே உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவும், அஜித் பவார் உள்ளிட்டோரின் கட்சித் தாவலை கடுமையாக விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications