எந்த பஞ்சாயத்துமே இல்லீங்க.. ஒன்னாவே எல்லா தேர்தலையும் சந்திப்போம்..திடீரென ராசியான பாஜக-சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக இடையே எந்த முரண்பாடும் இல்லை; இரு கட்சிகளும் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் இணைந்தே போட்டியிடும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை ஒரு அணியாக்கி அதனுடன் இணைந்து பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே முதல்வர், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக இருந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தலைவர்கள் மீது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைவர்கள் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாஜக தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது எனவும் விமர்சித்திருந்தனர். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது; இதனால் தங்களுடைய சிவசேனாவுக்கு சொற்ப இடங்களைத்தான் தரப் போவதாகவும் அக்கட்சி எம்.பிக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று இரவு சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்புக்குப் பின், மகாராஷ்டிராவில் சிவசேனா- பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டாகிறது. அதனையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். பாஜக-சிவசேனாவைப் பொறுத்தவரையில் இனி வரும் காலங்கள் அனைத்திலும் அனைத்து தேர்தல்களிலும் இரு கட்சிகளுமே இணைந்தே போட்டியிடும்; இரு கட்சிகளிடையே எந்த மன வருத்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications