மகாராஷ்டிரா தேர்தல்: மகா விகாஸ் அகாடியில் இழுபறியில் 66 சீட்-அக்.20-ல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் 216 தொகுதிகளைப் பகிர்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வரும் 20-ந் தேதி காங்கிரஸ் கட்சி தமது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி- ஷிண்டே சிவசேனா- அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே சிவசேனா- சரத்பவார் தேசியவாத காங்கிர்ஸ் - சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மகா விகாஸ் அகாடியில் கடந்த சில நாட்களாக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 216 சட்டசபை தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இறுதி முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தகவல்களின்படி, மும்பை பிராந்தியத்தில் 36 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே சிவசேனா 18, காங்கிரஸ் 15, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 2, சமாஜ்வாதி கட்சி 1 என பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும் தற்போதைய தொகுதி உடன்பாட்டின் அடிப்படையில் முடிவு எட்டப்பட்ட 66 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் காங்கிரஸ் இறுதி செய்துவிட்டதாம். இந்த 66 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வரும் 20-ந் தேதி அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நாந்தெட் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் வசந்தராவ் சவாண், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications