"கை உடன் சேர்ந்த தாமரை.." கண்கள் சிவந்த பாஜக தலைமை.. ஒரே நாளில் காங்கிரஸ் கூடாரமே மொத்தமாக காலி
மும்பை: இந்திய வரலாற்றிலேயே நடக்காத நிகழ்வாக மகாராஷ்டிராவில் ஒரு பகுதியில் பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தது நாடு முழுக்க விவாதமாக மாறியிருக்கிறது. இது குறித்த தகவல் வெளியான உடனேயே 24 மணி நேரத்தில் அங்கு ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துவிட்டது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பொதுவாக அரசியலில் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனச் சொல்வார்கள். ஆனாலும் கூட பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி அமைப்பது என்பது யாரும் யோசிக்கக்க் கூட முடியாத ஒரு விஷயம். ஆனால், அது உண்மையாகவே நடந்திருந்தது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்த நிலையில், அங்கு அம்பர்நாத் நகராட்சியில் பாஜகவும் காங்கிரஸும் கை கோர்த்தது.

வினோத கூட்டணி
அம்பர்நாத் நகராட்சியில் பாஜகவின் உள்ளூர் பிரிவு காங்கிரஸ் மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. கடந்த மாதம் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் சிவசேனா அதிக இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 59 உறுப்பினர்களைக் கொண்ட உள்ளாட்சி அமைப்பில் சிவசேனா 28 இடங்களையும், பாஜக 14 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும், என்சிபி 4 இடங்களையும் பிடித்தன. சிவசேனா அங்கு அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் வகையில் பாஜக- காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது.
கண்கள் சிவந்த தலைமை
நேற்றைய தினம் இது குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. இது நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வரான பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதை கடுமையாகச் சாடியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒழுங்கீனமான செயல் என்று குறிப்பிட்ட பட்னாவிஸ், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இதுபோல கூட்டணி அமைத்தோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநிலத் தலைமையிலும் இதில் கடும் கோபத்தில் இருக்கிறது. இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அம்பர்நாத் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹர்ஷ்வர்தன் சக்கன் உத்தரவின் பேரில், அம்பர்நாத் பிளாக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரதீப் பாட்டீல் மற்றும் 12 கவுன்சிலர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, தன்னிச்சையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மொத்தமாகக் காலி
இடைநீக்கம் என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் மற்றொரு மாற்றமும் நடந்தது. அதாவது அந்த 12 பேரும் மொத்தமாக பாஜகவுடன் இணைந்துள்ளனர். இதனால் அமர்நாத் மாநகராட்சியில் இப்போது காங்கிரஸ் கவுன்சிலர்களே இல்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் பிரதிநிதிகள் அனைவரும் மொத்தமாக பாஜகவில் இணைந்துள்ளதால் இப்போது அங்குப் பெரும்பான்மைக்குத் தேவையான சீட்கள் பாஜகவுக்குக் கிடைத்துவிடுகிறது.
அகோட் நகராட்சி
அங்குள்ள அகோட் நகராட்சி மன்றத்திலும் இதே போன்ற சூழ்நிலை உருவானது. அங்கு ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி, தாக்கரே சிவசேனா (யூபிடி), ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி, சரத் பவார் என்சிபி மற்றும் பச்சு காதுவின் பிரஹார் ஜனசக்தி கட்சியுடன் இணைந்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. அங்குக் காங்கிரஸ் மற்றும் வஞ்சித் பகுஜன் ஆகாடிக்கு எதிராக பாஜக இந்தக் கூட்டணியை அமைத்திருந்தது.
மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கும் பாஜக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்திலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இப்படி உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அமைந்த நேர் எதிரான கூட்டணி குறித்த செய்திகள் தேசியளவில் கவனம் ஈர்ப்பதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications