பாஜகவை கடுப்பேற்றும் ஏக்நாத் ஷிண்டே- மும்பை ஆலோசனைக் கூட்டத்தை திடீரென ரத்து செய்ததால் பரபரப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற இருந்த மகாயுதி ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க முடியாது என தெரிவித்திருப்பது பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு விரைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 5-ந் தேதி பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் குறித்து மகாயுதி கூட்டணியில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனால் மகாயுதி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது; உடல்நலன் சரியில்லை என இடைக்கால முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துவிட்டார். இதனால் பாஜக, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏக்நாத் ஷிண்டேவைப் பொறுத்தவரையில் முதல்வர் பதவியை முதலில் விட்டுத் தர மறுத்தார். இதில் பிரதமர் மோடி தலையிட்டதால் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஏக்நாத் ஷிண்டே.
ஆனால் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியுடன் உள்துறை ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் ஷிண்டே உறுதியாக நிற்கிறார். துணை முதல்வர் பதவியை தர முன்வரும் பாஜக, உள்துறையை தர ஒப்புக் கொள்ள மறுக்கிறது. இதனால் ஏக்நாத் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் திடீரென இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மகாராஷ்டிரா புதிய ஆட்சி அமைவதில் நீடிக்கும் முட்டுக்கட்டை தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களுடன் அஜித் பவார் ஆலோசனை நடத்துவதார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications