கடைசி நேரத்தில் காலைவாரிய 'பவார்'.. 2019 ல் தேவேந்திர பட்னாவிஸ் எடுத்த சபதம் நிறைவேறுகிறது?
மும்பை: மகாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தலுக்கு பின்பு பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அஜித் பவாரின் ஆதரவுடன் 2019 நவம்பர் 8-ம் தேதி பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அப்போது 2019ம் ஆண்டு ராஜினாமா செய்யும் போது சபதம் எடுத்த தேவேந்திர பட்னாவிஸ், மீண்டும் முதல்வராவேன் என்றார். அவரது சபதம் நிறைவேறப்போகிறது.
அரசியலில் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதே நாம் எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று சொல்வார்கள்.. அது மறுக்க முடியாத உண்மை.. அதேபோல் என்ன விமர்சனங்கள் வந்தாலும் இறுதியில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள், யார் அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்பதை தான் இந்த உலக பார்க்கிறது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என்று பார்ப்பதே இல்லை.. அரசியல்வெற்றி தான் இறுதி இலக்கு. அந்த வெற்றி எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு மக்களும் முக்கிய காரணம் ஆகும். சரி விஷயத்திற்கு வருவோம்.

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு 54 இடங்கள் கிடைத்தன. இதில் சிவசேனா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு பாஜகவுடன் சேர மறுத்தது. காங்கிரஸ் இந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டு உத்தவ் தாக்ரேவை முதல்வராக்க முடிவு செய்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவை ஆதரிக்க முடிவு செய்தது.
இதனிடையே அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அப்படியே பாஜகவை ஆதரித்தனர். இதனால் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைப்பது உறுதியானது. அதேநேரம் பொதுவாக எந்த கட்சிக்கு அதிக பெரும்பான்மை உள்ளதோ, அந்த கட்சியைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார். அப்படித்தான் அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, பாஜக ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி கடந்த 2019 நவம்பர் 8-ம் தேதி பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்கள்.
ஆனால் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க மறுத்தது. இதன்காரணமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு முறை தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில். பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகிய பிறகு எங்களோடு கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்தது. அந்த கட்சியோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடனும் ஆலோசித்துதான் முடிவு செய்தோம். இதன்படி நான் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றோம்.
சரத் பவாரின் ஒப்புதலுடன் ஆட்சி அமைத்தோம். ஆனால் தேசியவாத காங்கிரஸ் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டது. நாங்கள் இரண்டு முறை ஏமாற்றப்பட்டோம்" என்றார். இதனிடையே அந்த சமயத்தில் அஜித்பவார் திடீரென காலைவாரிவிட்டு வழக்கம் போல் சரத்பவாருடன் இணைந்து கொண்டார். இதனால் தேவேந்திர பட்னாவிஸால் முதல்வராக முடியாமல் போனது. அப்போது சபதம் எடுத்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவேன் என்றார்.
அவர் எதிர்பார்த்தது போலவே இப்போது மகாராஷ்டிராவில் முதல்வராக போகிறார். ஏனெனில் பாஜக இந்த முறை 129 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளது . மெஜாரிடிக்கு வெறும் 16 இடங்கள் மட்டுமே கூடுதலாக தேவை. இதுதவிர பாஜகவின் கூட்டணி கட்சியான ஷிண்டேவின் சிவசேனா 47 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக 217 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆவது உறுதி என்கிறார்கள் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications