போதும் இந்த ஆளுநர் பதவி.. ஆளை விடுங்க.. விடுவித்து விடுங்கள்.. மோடியிடம் சொன்ன மகாராஷ்டிரா கவர்னர்
மும்பை: தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் தன்னை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு நேரடியாக பிரதமர் மோடியிடம் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக்கொண்டர் என்று அம்மாநில ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அணியின் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்த மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆளுநராக பதவி வகித்து வரும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு அதிகாலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது பெரும் விவாதத்தை கிளப்பியது.
குடியரசு தின வரவேற்பு: ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் தமிழ்நாடு, திருவள்ளுவர் ஆண்டு!
மும்பை, தானேவில் பணமே இருக்காது
அதேபோல், சத்ரபதி சிவாஜி அந்த காலத்தின் அடையாளம். அம்பேத்கர், நிதின் கட்காரி ஆகியோர் இந்த காலத்தின் அடையாளம் என கடந்த ஆண்டு பேசியிருந்தார். பகத்சிங் கோஷ்யாரியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநருக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் நடத்தின. இந்த சர்ச்சை நீடித்துக் கொண்டு இருந்த போதே "மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது" என்று பேசியிருந்தார்.
ஆளுநரை திரும்பப் பெற
மகாராஷ்டிராவில் ஆளுநரின் இந்த பேச்சும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் கூட சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பேரணி நடத்தின. இந்த பேரணியிலும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வந்தனர்.
பிரதமர் மோடியிடம் கோரிக்கை
இந்த நிலையில், தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் தன்னை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு நேரடியாக பிரதமர் மோடியிடம் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி கடந்த 19 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வருகை தந்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவரிடம் நேரடியாக பகத்சிங் கோஷ்யாரி இந்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை ஆளுநர் பதவியில் இருந்து
பொதுவாழ்வில் இருந்து முழுமையாக விலகி புத்தகம் படிப்பது தியானம் செய்வது போன்றவற்றை செய்ய விரும்புவதாகவும் தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் தன்னை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு நேரடியாக ஆளுநர் கேட்டுக்கொண்டர் என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதிவிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றியது பெருமை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடு குறித்த விமர்சனங்களும் விவாதங்களும் தற்போது அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிராக செயல்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்தான விவாதம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கோரியிருப்பது தெசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.