புதிய குழப்பம்! "மகாராஷ்டிராவில் இப்போ வாக்கு எண்ணிக்கை இல்லை" 20 நாட்கள் தள்ளி வைத்த தேர்தல் ஆணையம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்த நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை திடீரென ஒத்திவைக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் இப்போது பட்னாவிஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி இருக்கிறது. என்டிஏ கூட்டணியில் பாஜக, சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அங்கு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் காவதியாகி இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.

உள்ளாட்சி தேர்தல்
அங்கு இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 246 நகராட்சி மன்றங்கள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் என மொத்தம் 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்றைய தினம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.. மீதமுள்ள மாநகராட்சிகளுக்கான டிசம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் டிசம்பர் 3ம் தேதி, அதாவது இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். அதாவது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் முன்பே, முதற்கட்ட தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அது வாக்காளர்களின் முடிவுகளை பாதிக்கும் என சொல்லப்பட்டது.
மாற்றம்
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க உத்தரவிட்டனர். இன்றைய தினம் நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கையை 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அதாவது டிசம்பர் 21ம் தேதி நடத்த வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க சில காரணங்களால் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருந்த சில உள்ளாட்சி அமைப்புகளிலும் கூட வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். சில இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக சொல்லி வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
பட்னாவிஸ்
இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் எந்த விதிகளின் அடிப்படையில் இப்படி வாக்குப்பதிவுகளை ஒத்திவைக்கிறது என்றே புரியவில்லை என பட்னாவிஸ் தெரிவித்தார். அதேநேரம் மாநில தேர்தல் ஆணையம் சுயாட்சி பெற்ற அமைப்பு என்றும் அவர்களுக்கு அதிகாரம் இருப்பதால் இந்த உத்தரவுகளை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் இந்த உள்ளாட்சி தேர்தலில் வினோதமான ஒரு அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது அங்கு மாநில அரசில் பாஜக, சிவசேனா, என்சிபி ஒரே கூட்டணியில் இருக்கிறது. இருப்பினும், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சிவசேனா களமிறங்குகிறது. பல தொகுதிகளில் சிவசேனாவும் என்சிபி கட்சியும் இணைந்து பாஜகவுடன் மோதுகிறது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போதும் கூட இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வந்தனர்.












Click it and Unblock the Notifications