அதிர்ச்சி!மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா.. என்ன சொல்கிறார் துணை முதல்வர்
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் அதிர்ச்சி தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட பின்னர் நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பும் சரி, ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கையும் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த 12 நாட்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து அங்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம்.. முதல்நாள் விமர்சனம்.. மறுநாளே அமித் ஷாவிற்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
பொது நிகழ்ச்சிகள்
இந்நிலையில் பீமா கோரிகான் போரின் 204ஆம் நினைவு நாளை முன்னிட்டு பெர்ன் கிராமத்தில் உள்ள ராணுவ நினைவுச் சின்னத்திற்குச் சென்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், "கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் ஆலோசனை நடத்தினோம். அவர் பொது இடங்களில் கூட்டங்களைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். இதனால் அனைத்து விதமான பொது நிகழ்ச்சிகளும் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கக் கூடாது என்றால் இதுபோல சிலவற்றை நாம் தியாகம் செய்யத்தான் வேண்டும்.
கூடுதல் கட்டுப்பாடுகள்
பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே நாட்டில் சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மும்பை மற்றும் புனே பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. வைரஸ் பரவல் வேகம் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா தொடர்ந்து வேகமாகப் பரவினால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கூடுதல் கட்டுப்பாடுகள் வேண்டாம் என்றால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அமைச்சர்கள்
கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களைக் கூட குறைத்தோம். இதுவரை மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு, பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என அனைவரும் தான் விரும்புகிறார்கள். புதிய உருமாறிய கொரோனா வேகமாகப் பரவுகிறது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் 8067 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வியாழக்கிழமையைக் காட்டிலும் 50% அதிகமாகும். குறிப்பாக மும்பையில் மட்டும் 5631 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல மும்பையில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 7,85,110ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவது தொடர்பாக அம்மாநில அரசு கூடுதலாக சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.