அமித் ஷாவின் ராஜதந்திரம்! கோர்ட் தீர்ப்பே சாதகமாக வந்தாலும்.. உத்தவ் ஒன்னும் பண்ண முடியாது! போச்சே!
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இந்த நிலையில் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தாலும் உத்தவ் தாக்கரேவால் எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள் மகாராஷ்டிரா அரசியல் வல்லுனர்கள்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இணைந்து ஆட்சி அமைத்து உள்ளனர். மகாராஷ்டிரா துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
1967 முதல் பார்க்கிறேன்.. இதுவரை இப்படி நடந்ததில்லை.. மகாராஷ்டிரா ஆளுநரை கிண்டல் செய்யும் சரத் பவார்
இன்று பெரும்பான்மை
இந்த நிலையில் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் 287 எம்எல்ஏக்கள் தற்போது உள்ளனர். இதில் பெரும்பான்மை பெற 144 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணியிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் 39 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு பாஜகவிடம் 106 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஏக்நாத் ஷிண்டே
இந்த நிலையில்தான் இன்று கண்டிப்பாக ஏக்நாத் ஷிண்டே அரசு பாஜக உதவியுடன் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. 166 எம்எல்ஏக்கள் மொத்தமாக பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவிற்கு ஆதரவாக உள்ளனர். நேற்று நடந்த சபாநாயகர் வாக்கெடுப்பில் தேர்தலிலும் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணிதான் வெற்றிபெற்றது. பாஜக எம்எல்ஏ ராகுல் நார்வேக்கார்தான் நேற்று சபாநாயகராக தேர்வானார். இவருக்கு 164 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
எத்தனை எம்எல்ஏக்கள்
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி சார்பாக போட்டியிட்ட எம்எல்ஏ ராஜன் சால்விக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது பாஜக எம்எல்ஏ ராகுல் நார்வேக்கார் அங்கு சபாநாயகர் ஆகி உள்ளார். உத்தவ் தாக்கரேவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி உள்ளது. ஏனென்றால் முன்னதாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அணி உத்தரவிட்டது. ஆனால் இதற்கு ஆளுநர் அனுமதி அளித்து அதை சபாநாயகர் ஏற்கும் முன் உச்ச நீதிமன்றம் ஜூலை 11 வரை இடைக்கால தடை விதித்தது.
பாஜக எம்எல்ஏ
ஜூலை 11ம் தேதி வரை இதில் பதில் அளிக்க ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு கொடுத்தாலும், அதனால் உத்தவ் தாக்கரேவிற்கு என்ன விதமான பயனும் இனி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. ஏனென்றால் இப்போது சபாநாயகர் பாஜக எம்எல்ஏ ராகுல் நார்வேக்கார். இவர்தான் தகுதி நீக்கத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அமித் ஷா
உச்ச நீதிமன்றம் 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளித்தாலும் கூட கடைசியில் கண்ட்ரோல் எல்லாம் சபாநாயகர் பாஜக எம்எல்ஏ ராகுல் நார்வேக்கார் கையில்தான் இருக்கிறது. அவர் தகுதி நீக்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். இது உத்தவ் தாக்கரேவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது... ஆட்சியை கவிழ்க்க அவரிடம் உள்ள கடைசி அஸ்திரமும் காலியாகிவிட்டது. அமித் ஷா மற்றும் பாஜக ராஜதந்திரமாக செயல்பட்டதால்.. தற்போது உத்தவ் தாக்கரேவின் அணி தகுதி நீக்கம் செய்யப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.