மகாராஷ்டிராவில் நீடிக்கும் கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கனமழை மீண்டும் நீடிக்கும் என்று ரெட் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பத்து நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் ஆகிய மாவட்டங்கள் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை நீடிக்கும் என்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு வார காலமாக தொடர்மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலைகள், ரயில் பாதைகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெஸ்லா கார்கள் எப்போது? யூ டியூபர் மதன் கௌரி கேள்விக்கு... எலான் மஸ்க் பளிச் பதில்
கடலோர மாவட்டமான ராய்கட் மாவட்டம் தான் கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராய்கட்டில் உள்ள தலாய் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 36 வீடுகள் மீது பாறைகள் சரிந்து நசுக்கியது. இந்த கோர நிகழ்வில் ஏராளமானோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர், மேலும் 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சதாரா, கோலாப்பூரில் பெய்த கனமழைக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேரைக் காணவில்லை.
சாங்கிலி, சதாரா, கோலாப்பூர் மாவட்டங்களில் 85 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ரத்னகிரி மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ரத்னகிரி மற்றும் ராய்கட் மாவட்டத்தில் மழை நீர் மாடி வரை வந்திருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கெத் தெஹ்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் இறந்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் பி என் பாட்டீல் உத்தரவிட்டு உள்ளார். அந்த மருத்துவமனையில் 22 நோயாளிகள் இருந்தனர், சம்பவத்திற்குப் பிறகு, மற்றவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சத்தாரா மாவட்டத்திலும் கடுமையாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்தும், பல்வேறு நிகழ்வுகளிலும் அங்கு 27 பேர் பலியாகி உள்ளனர். இந்த மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக 10 முதல் 12 நிலச்சரிவுகள் வரை ஏற்பட்டிருப்பதாகவும் இது கவலையளிப்பதாகவும் அமைச்சர் பாலாசாகேப் தோரட் கூறியுள்ளார்.
இதனிடையே, ஏற்கனவே மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கொங்கன், மும்பை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள சேதத்தை அடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 34 அணிகள் மீட்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளன.
புனே மற்றும் கோவாவில் மேலும் 6 அணிகள் களமிறக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து 15 ராணுவ அணிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறான தொடர் மழை காரணமாக அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அமைச்சர் தோரட் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மும்பை மாநகராட்சியின் இரண்டு அணிகள் ராய்காட் மற்றும் கோலாப்பூருக்கு புறப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப்படை மேலும் 8 அணிகளை மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது. இப்போது பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மொத்தம் 34 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மும்பை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் குழு ஒன்று ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்துக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது. இதில் இரண்டு மருத்துவ குழுக்கள், 1 மொபைல் மருத்துவ ஆய்வகம், திடக்கழிவு மேலாண்மைத் துறையின் 75 ஊழியர்கள், 4 தண்ணீர் லாரிகள், 1 தோண்டும் லாரி போன்றவை அனுப்பப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலாய் லாமா இரங்கல்
பேரழிவுகரமான வெள்ளத்தில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாக பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு காரணமாக மகாராஷ்டிராவில் உயிர் இழப்பு, சொத்து சேதம் மற்றும் மகாராஷ்டிராவில் பலர் சந்தித்த துன்பங்கள் பற்றிய செய்திகளை அறிந்து வேதனைப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.