புதிய உச்சம்.. ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா.. மிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய உச்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா காரணமாக மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
உச்சத்தில் கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் புதிய உச்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் அங்கு 63,294 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் கொரோனா காரணமாக அங்கு 349 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 1.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
தற்போது மராட்டியத்தில் 5.65 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் மட்டும் உள்ளனர். இதனால் மாநிலத்திலுள்ள பல இடங்களிலும் கொரோனா படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் லாக்டவுன்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. அதன்படி வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், முழு லாக்டவுன் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அடுத்த 15 நாட்களுக்கு முழு லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இரண்டாம் இடம்
உலகளவில் இந்தியாவிலேயே கடந்த இரண்டு வாரங்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் ஆறு நோயாளிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது வரை 1.35 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.