மகாராஷ்டிரா: பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- இன்றும் பதற்றம்- ஆக. 24-ல் பந்த்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பத்லாப்பூரில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மழலையர் பள்ளியை பொதுமக்கள் சூறையாடியதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பதற்றம் நீடிக்கிறது. பத்லாப்பூர் நகரில் பெரும்பாலான பள்ளிக் கூடங்கள் இன்றும் மூடப்பட்டிருக்கின்றன. அத்துடன் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 24-ந் தேதி மகாராஷ்டிரா பந்த் போராட்டத்துக்கு மகா விகாஸ் அகாடி அழைப்பு விடுத்துள்ளது.
மும்பையை அடுத்த பத்லாப்பூரில் ஆதர்ஷ் வித்யா மந்திர் என்ற பள்ளியில் படிக்கும் பிஞ்சு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அந்த பள்ளி ஊழியர்கள், பிஞ்சு குழந்தைகளை கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் அடுத்தடுத்து அம்பலமானது.

பொதுமக்கள் போராட்டம்- சூறை: இதனால் கொந்தளித்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அந்தப் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். அத்துடன் பத்லாப்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றும் மறியல் போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தை பல மணிநேரமாக தொடர்ந்ததால் அந்த மார்க்கத்தில் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் போலீசார் மீது பொதுமக்கள் கோபம் திரும்பியது.
சரமாரி கல்வீச்சு: தண்டவாளத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் அங்கிருந்த கற்களை எடுத்து சரமாரியாக போலீசார் மீது வீசினர். இதனால் தடியடி நடத்திய போலீசார் உயிருக்கு அஞ்சி தப்பி ஓடினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் 17 போலீசார் படுகாயமடைந்தனர்.
10 மணிநேர மறியல்: அதேநேரத்தில் பொதுமக்களின் ரயில் மறியல் போராட்டம் 10 மணிநேரத்தைக் கடந்தது. இதனையடுத்து உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடாததால் 2-வது முறையாகவும் போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.
மன்னிப்பு கேட்ட நிர்வாகம்: அப்போது, பொதுமக்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கோரியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் உடனே வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்த இன்ஸ்பெக்டர் சுபதா சிதாலேவும் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இன்றும் பதற்றம்: இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பத்லாப்பூரில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பத்லாப்பூரில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ரயில்வே போலீசாரும் வழக்குப் பதிவு செய்து 32 பேரை கைது செய்துள்ளனர். பொதுமக்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் அங்கு மேலும் போராட்டங்கள் வெடிக்கும் நிலைமை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக.24-ல் பந்த்: இதனிடையே பத்லாப்பூர் சம்பவத்துக்கு நீதி கோரி நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா பந்த்- முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் அகாடி இந்த மகாராஷ்டிரா பந்த்- முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மும்பையில் மகா விகாஸ் அகாடி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications