செம்மையா வெளுத்துவிட்ட உச்சநீதிமன்றம்.. மகாராஷ்டிரா சபாநாயகர் ராஜினாமா செய்வாரா? ஓயாத பரபரப்பு!
மும்பை: உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு உள்ளான மகாராஷ்டிரா சபாநாயகர் தமது பதவியை ராஜினாமா செய்வாரா? உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ஏற்று முதல்வர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இவ்வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. தற்போது இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் நேற்று உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா நிலைமை தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்தது. அதில் மிக முக்கியமானது, சட்டசபையில் ஒரு கட்சியின் கொறடா யார் என்பதை அரசியல் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்; சட்டசபை கொறடாவை ஒரு கட்சியின் சட்டசபை குழு நியமிக்க முடியாது. அப்படி நியமிக்கப்பட்ட ஒரு கொறடாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் என திட்டவட்டமாக தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். இதனால் ஏக்நாத் ஷிண்டே முதல்வராவதற்கு முந்தைய நிலைமையே தொடர வேண்டும் (அதாவது உத்தவ் தாக்கரே முதல்வராகவே தொடரலாம்) என உத்தரவிடலாம். ஆனால் அப்படி உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலைமையில் உத்தவ் தாக்கரே தாமாகவே ராஜினாமா செய்துவிட்டார் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் கட்சிக்கு உரிமையானவர்கள் யார் என சொல்ல முடியாது; ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் ஆளுநர்கள் தலையிடவும் கூடாது; உத்தவ் தாக்கரேவை எதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் ஆளுநர்? எனவும் குட்டு வைத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். இந்த கருத்துகள் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சட்டசபை கொறடா நியமனம் சட்டவிரோதம்; சபாநாயகர் அதனை ஏற்றது சட்டவிரோதம் என்கிற போது முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி வகிப்பதும் சட்டவிரோதம் என்பதுதான் பொருள். ஆகையால் ஏக்நாத் ஷிண்டே அரசு ராஜினாமா செய்ய வேண்டும்; ஆனால் பதவி ஆசை பிடித்த ஏக்நாத் ஷிண்டேவிடம் இதனை எதிர்பார்க்கவே முடியாது என்கின்றனர் சிவசேனா தலைவர்கள். ஆகக் குறைந்தபட்சம் உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு மதிப்பளித்து சபாநாயகர் தமது பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற குரல்களும் மகாராஷ்டிராவில் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications