மகாராஷ்டிராவில் RSS கிளப்பிய சர்ச்சை.. மராத்தி மொழிக்காக வரிந்து கட்டும் பாஜக!
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிக்க மராத்தி மொழி அவசியமில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறியிருந்து சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து, மராத்தி மொழிக்கு ஆதரவாக அம்மாநில பாஜக அரசு குரல் எழுப்ப தொடங்கியுள்ளது. இதுவரை ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வந்த போட்டி தேர்வுகள் இனி மராத்தி மொழியில் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
இந்திக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து மராத்தி மொழியை ஆர்எஸ்எஸ் சீண்டியிருப்பது, பாஜகவுக்குள் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.

பஞ்சாயத்துகள் ஒன்றா இரண்டா?:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக பஞ்சாயத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2023 ஆண்டு டிசம்பர் மாதம் பிரமதர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்திருந்தார். ஆனால், அந்த சிலை 1 வருடத்திற்குள் கடுமையாக சேதமடைந்தது. புயல் மழையில் சிக்கி கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்து சிதறியது. சிவாஜிக்கு பாஜக தரும் மரியாதை இதுதான் என்று எதிர்க்கட்சிகள் பேசவே, உடனடியாக மீண்டும் அந்த சிலை சரி செய்யப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் பாஜக சர்ச்சையில் சிக்கியதற்கு இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தற்போது மொழி சிக்கலிலும் பாஜக மாட்டிக்கொண்டிருக்கிறது.
புது சிக்கல்:
இந்த சிக்கலுக்கு காரணம் ஆர்எஸ்எஸ்தான். கடந்த வாரம் இதன் தலைவர் பையாஜி ஜோஷி சொன்ன விஷயம் தற்போது பாஜகவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. "மும்பைக்கு வருபவர்கள் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள தேவையில்லை. இந்த நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. காட்கோபர் பகுதியில், குஜராத்தி பேசப்படுகிறது. கிர்காமில், இந்தி மற்றும் மராத்தி ஆகியவை பேசப்படுகிறது" என்று கூறியிருந்தார்.
மாட்டிக்கொண்ட பாஜக:
தவளை தன் வாயால் கெடும் என்பதை போல.. ஆர்எஸ்எஸ் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. மும்பையை தனியாக பிரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருக்கிறது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மாநிலத்தில் பாஜகதான் ஆளும் கட்சியாக இருக்கிறது. எனவே ஆர்எஸ்எஸ்-ன் கருத்து பூதாகரமாக வெடித்திருக்கிறது.
எதிர்வினை:
பாஜகவின் தாய் அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இந்த அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்தும் அரசியல் கட்சியாக பாஜக இருக்கிறது. எனவே அமைப்பின் கருத்துக்கு எதிர்வினையாற்ற முடியாமல் பாஜக தவித்து வருகிறது. இந்நிலையில் இன்று அம்மாநில சட்டமன்றத்தில் உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த மிலிந்த் நர்வேகர் மராத்தி மொழி குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்..
போட்டி தேர்வுகள்:
"மராத்தியில் பொறியியல் பாடப்புத்தகங்கள் கிடைக்காததால், பொறியியல், வேளாண் துறைகளுக்கான போட்டி தேர்வுகள் தற்போது ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மராத்தி மொழியில் பொறியியல் கல்வியை வழங்க நாங்கள் அனுமதி கொடுத்திருக்கிறோம். எனவே மராத்தி மொழியில் பொறியியல் பாட புத்தகங்கள் கிடைக்கும். பொறியியல் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மராத்தியில் தயாரித்து, அந்த மொழியில் உள்ள அனைத்து தொழில்நுட்ப பதவிகளுக்கும் போட்டித் தேர்வுகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இதெல்லாம் தமிழ்நாட்டில் எப்போவே செய்தியாகிவிட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் இப்போதுதான் செய்கிறார்கள். எப்படியோ, அவர்கள் மாநில மொழியை அவர்கள் காப்பாற்றிக்கொண்டால் சரிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications