தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதல்வர்.. தேர்தலில் நிற்கும் உத்தவ் தாக்கரே.. முக்கிய கேள்வி!
பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து மகாராஷ்டிராவின் முதல் முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வாகி உள்ளார்.
மும்பை: பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வாகி உள்ளார். இன்னும் 6 மாதத்தில் இவர் தேர்தலில் நின்று எம்எல்ஏவாக வெற்றிபெற வேண்டும்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. சிவசேனா உடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.
இன்று இரவு அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் பதவி விலகினார். அதேபோல் அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியில் இருந்து பதவி விலகினார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே வரும் டிசம்பர் 1ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இவர் தற்போது எம்எல்ஏ கிடையாது. அதனால் இன்னும் 6 மாதத்தில் இவர் தேர்தலில் நின்று எம்எல்ஏவாக வெற்றிபெற வேண்டும்.
பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வாகி உள்ளார். பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து ஆதித்யா தாக்கரேதான் முதல்முறையாக தேர்தலில் நின்று வென்றவர். அவருக்கு அடுத்து அவரின் அப்பா உத்தவ் தாக்கரே தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளார்.
உத்தவ் தாக்கரே யாருடைய தொகுதியில் போட்டியிடுவார். அவருக்காக எம்எல்ஏ பதவியை யார் ராஜினாமா செய்வார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் சமயத்தில் ஆதித்யா தாக்கரேவை ராஜினாமா செய்ய வைத்து அவரின் வோர்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.