மும்பை மோதிலால் நகர் திட்டத்தில் அதானி கைகளில் 17 லட்சம் சதுர மீட்டர் நிலம்! ரூ.1 லட்சம் கோடி முதலீடு
மும்பை: மும்பையின் 143 ஏக்கர் பரப்பளவு மொட்டிலால் நகர் மறுசீரமைப்புத் திட்டத்தில் அதானி குழுமம் ₹1 லட்சம் கோடி முதலீடு செய்கிறது. இத்திட்டம் 28 லட்சம் சதுர மீட்டர் கட்டுமான பரப்பளவை உருவாக்கி, MHADA வீடுகளுடன், பல ஆயிரம் குடியிருப்புகளை ஏழு ஆண்டுகளுக்குள் 'CD&A' மாடல் கீழ் மறுசீரமைக்கும்.
இத்திட்டத்தின் கீழ், தொழிலதிபர் கௌதம் அதானிக்கு 17 லட்சம் சதுர மீட்டர் விற்பனை பகுதி கிடைக்கும். அதானி குழுமம் ₹1 லட்சம் கோடி முதலீடு செய்யும் என ஓர் உயர் அரசு அதிகாரி தெரிவித்தார்.

அதானி
மொத்த கட்டுமான பரப்பு 28 லட்சம் சதுர மீட்டர். இதில் 10.5 லட்சம் சதுர மீட்டருக்கும் மேல் குடியிருப்பாளர் மறுவாழ்வுக்கும் MHADAக்கும் ஒதுக்கப்படும். அதானி குழுமத்தின் எஸ்டேட்வியூ டெவலப்பர்ஸ் 17 லட்சம் சதுர மீட்டர் (1.82 கோடி சதுர அடி) இலவச விற்பனைப் பரப்பைப் பெறும்.
உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் 10-15 ஆண்டுகளுக்குள் செலவிடப்படும் என MHADA துணைத் தலைவர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் கூறினார். அதானி குழுமம் கடந்த ஆண்டு ஏலத்தில் வென்ற இத்திட்டம், முதல் 'CD&A' மாடலாகும். சதுர அடிக்கு ₹30,000 என்ற சந்தை விலை, குடியிருப்பு மேம்பாட்டை லாபகரமாக்குகிறது.
எதற்கு பயன்படும்
இத்திட்டம் குடியிருப்பு, வணிகம், கல்வி, விருந்தோம்பல் பகுதிகளைக் கொண்டது.. இருப்பினும், இது இறுதியான திட்டம் இல்லை.. இறுதி ஒதுக்கீட்டிற்காகத் திட்டம் காத்திருக்கிறது. சுமார் 5,000 குடியிருப்புகள் (குடியிருப்பு, வணிகம், குடிசை பகுதிகள்) ஏழு ஆண்டுகளுக்குள் மறுவாழ்வு பெறும். இந்த திட்டத்தின் கீழ் பூர்வீகக் குடியிருப்போருக்கே முன்னுரிமை என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு 1,600 சதுர அடி வீடும், கடை வைக்க விரும்புவோருக்கு 957 சதுர அடி இடமும் பெறுவார்கள். இந்த மறுசீரமைப்பால் அங்கு உள்ள மக்கள்தொகை அடர்த்தி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 5,000ல் இருந்து 25,000 குடும்பங்களாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டம் என்ன
நிலத்தின் உரிமை MHADA வசமே இருக்கும். டெவலப்பர் கட்டுமானம் மற்றும் விற்பனையை மட்டுமே மேற்கொள்வார். நிதி அல்லது மேம்பாட்டு உரிமைகளை மாற்றுவதற்கு MHADA-வின் முன் அனுமதி கட்டாயம்.
மொட்டிலால் நகர் திட்டம், மும்பையில் 923 ஏக்கர் பரப்பளவு 11 கூடுதல் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இதில் காமத்திபுரா, ஆதர்ஷ் நகர் (வோர்லி) பகுதிகள் அடங்கும். இத்திட்டங்கள் நகரின் மக்கள் தொகையை மாற்றியமைத்து, 75,445 குடியிருப்புகளுக்கு மறுவாழ்வு அளிக்கும்.
நகரையே மாற்றி அமைக்கும்
மும்பையில் பல்வேறு பகுதிகளில் வாடகை வருமானம் 2% என்று மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இதனால் குடிசை பகுதி மறுவாழ்வு மாடலை மறுபரிசீலனை செய்து, வாடகை வீட்டுவசதியை மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தாராவி போன்ற பெரும் திட்டங்கள், வீட்டுவசதி விநியோகத்தை அதிகரித்து, நகர்ப்புற நிலப்பரப்பை மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications