"ரூ.1400 கோடி" போதைப்பொருள்! பிரேக்கிங் பேட் ஸ்டைலில் கெமிஸ்ட்ரி பட்டதாரி விபரீதம்.. மிரண்ட போலீசார்
மும்பை: மகாராஷ்டிராவில் சுமார் 1,400 கோடி ரூபாய் போதைப்பொருள் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் இருந்து கொண்டு இருக்கிறது. இதனால் இளைஞர்களின் வாழ்க்கையே நாசமாகிறது.
மேலும், போதைப்பொருள் பயன்பாடு காரணமாக நாட்டில் நடக்கும் குற்றச்சம்பங்களும் கூட அதிகரித்து உள்ளது. இதனால் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை மாணவியின் “தற்கொலை கடிதம்” நினைவிருக்கா? 9 மாத விசாரணையில் திடீர் திருப்பம்! 2 முதியவர்கள் கைது
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. இதைத் தடுக்க போலீசார் தொடர்ச்சியாக அதிரடி ரெய்டுகளை மேற்கொண்டே வருகின்றனர். அப்படித்தான், கடந்த மார்ச் மாதம் மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மார்ச் மாதம் போதைப்பொருள் தொடர்பாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்து இருந்தனர். இதனிடையே போலீசார் நேற்றைய தினம் மகாராஷ்டிரா பால்கர் மாவட்டம் நலசோபரா என்ற பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
1,403 கோடி ரூபாய்
போலீசாருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை நடத்தி உள்ளனர். அப்போது அங்கிருந்து சுமார் 709 கிலோ மெபெட்ரோன் என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு 1,403 கோடி ரூபாய் ஆகும். மேலும், இது தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. இதன் மூலம் இந்த போதைப்பொருள் வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
எப்படி
இது தொடர்பாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை ஆணையர் தத்தா நலவாடே கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பட்டதாரி. அதில் கிடைத்த அறிவை மெபெட்ரோன் போதைப்பொருளை உற்பத்தி செய்ய அவர் பயன்படுத்தி உள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் இதனை அவர்கள் விற்பனை செய்து வந்தனர். அவர்களது நெட்வோர்க் விரிவானதாக உள்ளது.
5 பேர் கைது
கடந்த மார்ச் மாதம் இதே போதைப்பொருள் வழக்கு தொடர்பாக காட்கோபர்- மன்குர்த் இணைப்பு சாலையில் ஏற்கனவே இரண்டு பேரைக் கைது செய்தோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மெபெட்ரோன் சப்ளை செய்வதில் ஒரு பெண் ஈடுபட்டிருப்பதைத் தேட தொடங்கினோம். அவரை கடந்த ஜூலை 27ஆம் தேதி பிடித்தோம். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட்2ஆம் தேதி மற்றொரு குற்றவாளியைப் பிடித்தோம்.
ஆர்கானிக் கெமிஸ்ட்ரி
இவர்கள் 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஐந்தாவதாக ஒரு நபரிடம் இருந்தே போதைப்பொருளை வாங்கியதாகத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தி 5ஆம் நபரைக் கைது செய்தோம். அந்த நபர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர். அதில் கிடைத்த அறிவை கொண்டு மெபெட்ரோன் உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளார். தனது அடையாளத்தை மறைக்க அவர், சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிக் கணக்குகளையும் தொடங்கி உள்ளார்" என்றார்.
விசாரணை
அந்த நபரைக் கைது செய்த போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எங்கிருந்து அவர் போதைப் பொருளை உற்பத்தி செய்தார். அதை யாருக்கெல்லாம் யார் மூலம் விநியோகம் செய்தார் உள்ளிட்ட தகவல்களையும் தெரிந்து கொள்ள போலீசார் முயன்று வருகின்றனர்.