பல மாநில பட்ஜெட்களை விட அதிகம்.. ஒரு வழியாக மும்பைக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு! ஏன் முக்கியம்?
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பல ஆண்டுகளாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. பல ஆண்டு தாமதத்திற்குப் பிறகு ஒருவழியாக இப்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு அடுத்தாண்டு, அதாவது ஜனவரி 15ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு இணையாக உள்ளாட்சி அமைப்புகளும் ரொம்பவே முக்கியம். உள்ளாட்சி பிரதிநிதிகளும் வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும், பல மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. அரசியல் தொடங்கிப் பல கரணங்களால் இந்தத் தேர்தல் தாமதமாகிக் கொண்டே போகிறது.

மும்பை தேர்தல்
அப்படித் தான் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. அங்குக் கடைசியாக 2017ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால் அங்கு 2022ல் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், சில காரணங்களால் அங்குத் தேர்தல் நடக்காமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது மும்பை உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அங்கு ஜனவரி 15ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு மறுநாள் அதாவது ஜனவரி 16ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உடன் சேர்த்து 29 மாநகராட்சிகள், 32 மாவட்டக் குழுக்கள் மற்றும் 336 பஞ்சாயத்துகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மறுநாளே நடைபெறும்.
ஏன் முக்கியம்
இதில் மும்பை, புனே, தானே போன்ற முக்கிய நகரங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மாநில அரசின் மீதான செல்வாக்கையும், மக்களின் மனநிலையையும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றையும் விட மும்பை உள்ளாட்சித் தேர்தலே மிகப் பெரிய கவனம் பெறும். ஏனென்றால் நாட்டிலேயே மிகப் பெரிய மற்றும் ஆசியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை இருக்கிறது. நாட்டின் பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட மும்பைக்கான பட்ஜெட் அதிகமாகும். கடந்த தேர்தலில் பிளவுபடாத சிவசேனாவே மும்பையில் ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில், இந்த முறை அங்கு அரசியல் சூழல் மொத்தமாக மாறியுள்ளது.
ஷிண்டே
ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாஜகவுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறது. மேயர் யார் என்பதிலும் கூட இன்னும் கேள்வி இருக்கிறது. இது தொடர்பான கேள்விக்கு, கூட்டணி இணைந்தே மேயர் யார் என்பதை முடிவு செய்யும் எனப் பட்டும்படாமல் பதிலளித்தார் ஷிண்டே..ஒ கூட்டணிக்குள் சலசலப்பு உருவாகி இருப்பதையே இது காட்டுகிறது..
எதிர்க்கட்சி கூட்டணி
மறுபுறம், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்க உள்ளது. குறிப்பாக இத்தேர்தல் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் காங்கிரஸுக்கு மிக முக்கியமானது. அவர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த தேர்தலே தீர்மானிக்கும். மேலும், பல்லாண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் மீண்டும் இணைந்துள்ளதால் அது தேர்தல் களத்தில் எப்படி எதிரொலிக்கிறது என்பதையும் இந்த உள்ளாட்சித் தேர்தலே காட்டும். இருப்பினும், இரு சகோதரர்களும் இணைந்து போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறை தொடர்பான சட்ட, நிர்வாகப் பிரச்சனைகளால் 2022 முதல் இந்தத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் நிலுவையிலுள்ள அனைத்துத் தேர்தல்களையும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. அதைத் தொடர்ந்தே அங்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications