இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.. டூப்ளிகேட் சாவி கொடுத்த பெண்ணின் வீட்டில் ரூ 14 லட்சம் கொள்ளை
மும்பை: மும்பையில் இன்ஸ்டாகிராம் தோழியின் வீட்டில் ரூ 14 லட்சம் கைவரிசை காண்பித்த தோழனை போலீஸார் கைது செய்தனர்.
மும்பையின் கோலாபா பகுதியில் வசித்து வந்தவர் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். இவரது வீட்டில் 14 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் கொள்ளையனை தேடி வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்த போது இளைஞர் ஒருவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸார்
சிசிடிவி காட்சிகளில் இருந்த இளைஞர் குறித்து அந்த சார்ட்டர்ட் அக்கவுண்டன்டின் மகளுடன் பழகிய சாய்ஷான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். 19 வயது இளைஞரான சாயிஷான் மும்பை மாசாகான் பகுதியைச் சேர்ந்தவர்.
இன்பச் சுற்றுலா
இவருக்கு சிஏவின் மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் வெளியில் இருவரும் சுற்றிய போது தனது வீட்டின் டூப்ளிகேட் சாவி ஒன்றை சாயிஷானிடம் சிஏவின் மகள் கொடுத்துள்ளார். இதையடுத்து சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் குடும்பத்தினர் கடந்த மாதம் இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்.
டூப்ளிகேட் சாவி
இந்த தருணத்தை அந்த சாயிஷான் சரியாக பயன்படுத்திக் கொண்டார். டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி அந்த இளைஞர் ரூ 14 லட்சம் மதிப்பிலான நகை, பணம் , ஐபோன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். இன்பச் சுற்றுலாவை முடித்து வீடு திரும்பிய இன்ஸ்டாகிராம் தோழியின் குடும்பத்தினர், வீட்டில் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
மூதாட்டி
இதையடுத்து அந்த நபரிடம் இருந்து அவர் கொள்ளையடித்த பொருட்களை போலீஸார் மீட்டனர். இந்த கொள்ளைக்கு பிறகு அந்த இளைஞர் தாணே பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையிலும் திருடியுள்ளார். சுவற்றில் துளையிட்டு கொள்ளையை அரங்கேற்றியுள்ளதும் தெரியவந்தது. அது போல் நாகபாடா பகுதியில் ஒரு மூதாட்டியை தாக்கி 71 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தும் தெரியவந்தது.