காதுல மாட்டுனா அது தோடு பாஸ்.. மாஸ்க் எப்படி போடணும் தெரியுமா? மும்பை போலீசின் நச் பதிவு!
பொதுமக்கள் எவ்வாறு முகக் கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து மும்பை போலீஸ் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
மும்பை: முகக்கவசம் அணிவது எவ்வாறு என்பது குறித்து கிண்டலான பதிவின் மூலம் அழகாக விளக்கி இருக்கிறது மும்பை போலீஸ்.
கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து முகக்கவசமும் நம் ஆடைகளின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதன் காரணமாக, விதவிதமான முகக்கவசங்களை வடிவமைப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இதன் காரணமாக சந்தையில் தற்போது பலவகையான முகக் கவசங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆடைக்கு தகுந்து மாதிரியான மேட்சிங் முகக்கவசங்கள் கூட சந்தைகளில் கிடைக்க துவங்கிவிட்டன.
ஆனால் இத்தனை விதமான முகக் கவசங்கள் கிடைத்தாலும் நம்ம மக்கள் அதை முறையாக அணிவதே இல்லை. எதற்காக முகக்கவசம் அணிகிறோம் என்பதே புரியாமல் பலரும் அணிகின்றனர். வாயையையும், மூக்கையும் மூடாமல், தாடையை மூடியபடி பலரும் முகக்கவசத்தை மாட்டிக்கொண்டு திரிகின்றனர்.
ஒரு சிலர் ஒரு பக்க காதில் ஏதோ காதணி போல மாட்டிக்கொண்டு நடமாடுகிறார்கள். இன்னும் எப்படி எப்படி எல்லாம் வித்தியாசமாக முகக் கவசத்தை அணியலாம் என யோசித்து அணிகின்றனர் மக்கள். அவர்களுக்கு முகக் கவசத்தை எப்படி அணிய வேண்டும் என கிண்டலான பதிவின் மூலம் விளக்கி இருக்கிறது மும்பை போலீஸ்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த படத்தில், முதலில் ஒருவர் தாடையில் மாஸ்க் போட்டிருக்கிறார். அதை 'X' தவறு என குறிப்பிட்டு, ஸ்கார்ப் தான் இப்படி அணிவார்கள் என விளக்கப்பட்டிருக்கிறது. அடுத்து ஒருவர் முகக்கவசத்தை காதில் தொங்கவிட்டிருக்கிறார். அதை 'X' தவறு என குறிப்பிட்டு, காதணியை தான் இப்படி அணிவார்கள் என போலீசார் கிண்டல் செய்துள்ளனர்.
மூன்றாவதாக ஒருவர் மூக்கையும், வாயையும் கவர் செய்தபடி முறையாக முகக்கவசம் அணிந்திருக்கிறார். இது தான் சரியான முறை என டிக் செய்து விளக்கி இருக்கிறார்கள் மும்பை போலீசார். அவர்களுடைய இந்த நக்கல் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications