அப்படியே "ஐ" விக்ரம் போல! முடி கொட்டுது, நகம் உதிருது! இந்திய கிராமத்தில் பெண்கள் உட்பட பலர் பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு திடீரென 200க்கும் மேற்பட்டோருக்கு முடி கொட்டி மொட்டை தலையாக மாறினர். இதற்கிடையே இப்போது நான்கு கிராமங்களைச் சேர்ந்த 29 பேரின் நகங்கள் திடீரென உதிர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் திடீர் திடீரென வினோத நோய்கள் பரவி வருகிறது. இது என்ன புதுசா என நாம் யோசிப்பதற்குள் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா கூட இதுபோலத் தான் சின்ன பாதிப்பாகத் தொடங்கி சட்டென பெரிய நோயாக மாறியிருந்தது.

திடீர் மர்மம்
இதற்கிடையே வடக்கு மகாராஷ்டிராவில் அதுபோலத் தான் சில மாதங்களுக்கு முன்பு வினோதமான ஒரு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதாவது அங்குள்ள ஷேகான் என்ற ஊரைச் சுற்றி இருக்கும் 15 கிராம மக்களுக்குத் திடீரென முடி கொட்டத் தொடங்கியுள்ளது. ஆண், பெண் வித்தியாசமின்றி முடி கொட்டிய நிலையில், 200க்கும் மேற்பட்டோர் மொட்டைத் தலையாக மாறினர்.
அப்போது அனைவருக்கும் ஒரே அறிகுறி தான் இருந்துள்ளது. முதலில் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு ஏற்பட்ட நிலையில், அதைச் சொறிந்த போது முடி ஐ விக்ரமை போல கையோடு வந்துவிட்டதாம். பிறகு சில நாட்களில் மொத்தமாக முடி கொட்டிவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டனர்.
அடுத்த மர்மம்
இது நாடு முழுக்க பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் அங்குள்ள மக்கள் சாப்பிட்டு வந்த கோதுமையில் ஒருவித கெமிக்கல் அதிகமாக இருந்ததாகவும் அதுவே முடி கொட்டும் பிரச்சினைக்குக் காரணமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சில மாதங்களில் அங்கு மற்றொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தக் கிராமத்தில் உள்ள மக்களுக்குத் திடீரென நகங்கள் தானாக விழுந்துவிடுகிறதாம். இதுவரை சுமார் 30 பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் புல்தானா மாவட்ட சுகாதார அதிகாரி கூறுகையில், "ஷேகான் பகுதியில் உள்ள நான்கு கிராமங்களில் 29 பேரின் நகம் இதுபோல விழுந்துள்ளது. அவர்களுக்கு நகங்கள் மொத்தமாக உதிர்ந்து போய்விட்டது. அவர்களுக்கு முதலுதவி கொடுத்து, உயர் சிகிச்சைக்காக ஷேகான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.
நகங்களே இல்லை
உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ராம் தர்கர் கூறுகையில், "எங்கள் மக்களுக்குக் கடந்த சில நாட்களாக நக உதிர்தல் பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சினையிலும் அனைவருக்கும் ஒரே அறிகுறி தான் இருக்கிறது.. முதல் இரண்டு நாட்களில், நகங்கள் விரிசல் அடைகிறது. பிறகு அவை மொத்தமாக விழுந்துவிடுகிறது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்" என்றார்.
தொடரும் விசாரணை
சுமார் 30 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றபோதிலும் முடி உதிர்தல் பிரச்சினைக்குக் காரணமாக இருந்த செலினியம் இதற்கும் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஐ விக்ரமை போல முடி, நகம் என அடுத்தடுத்து இழந்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications