பாஜகவின் எதிர்ப்பை மீறி 'தாவூத் அஜித்பவார் என்சிபி வேட்பாளராக கூட்டாளி' நவாப் மாலிக் வேட்பு மனு!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) கடும் எதிர்ப்பை மீறி நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் தேர்தலில் போட்ட்யிட துணை முதல்வர் அஜித்பவார் சீட் வழங்கி இருக்கிறார். அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக மான்கூர்டு- சிவாஜி நகர் தொகுதியில் களம் காண்கிறார்.
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கை கடந்த காலங்களில் பாஜக மிக கடுமையாக விமர்சித்தது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் குழுவுடன் தொடர்பில் இருக்கிறார் நவாப் மாலிக் எனவும் குற்றம்சாட்டியது பாஜக. மேலும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் நவாப் மாலிக் தாம் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். ஆனால் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ள மகாயுதி கூட்டணியில் இருக்கும் பாஜகவோ இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் நவாப் மாலிக் மகள், சனா மாலிக் அணுசக்தி நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் நவாப் மாலிக் தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.
தற்போது மான்கூர்டு- சிவாஜி நகர் சட்டசபை தொகுதியில் நவாப் மாலிக், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக களம் காண வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக தம்மை வேட்பாளராக அறிவிக்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என அறிவித்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகவும் புறப்பட்டுவிட்டார் நவாப் மாலிக். கடைசிநேரத்தில் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கான விண்ணப்பம், நவாப் மாலிக்கிடம் கொடுக்கப்பட்டதால் அக்கட்சியின் வேட்பாளராகவே வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதற்கும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தொகுதியில் நவாப் மாலிக்கை பாஜக ஆதரிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications