ஷாருக் மகன் ஆர்யன் கானுக்கு.. சர்வதேச போதைப் பொருள் நெட்வோர்க்கில் தொடர்பு.. பகீர் கிளப்பிய NCB
மும்பை: ஆர்யான் கானுக்கு சர்வதேச போதைப் பொருள் நெட்வொர்க்கில் இருப்பவர்களுடன் தொடர்பு இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் இம்மாத தொடக்கத்தில் ரேவ் பார்டி எனப்படும் போதைப் பொருள் பார்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் ரகசியமாக ஏறினர். அந்த சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதை உறுதி செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இது தொடர்பாக 10 பேரைக் கைது செய்தனர்.

ஜாமீன் வழக்கு
இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யன் கானுக்கு ஆதரவாக பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிபதி விவி பட்டேல் முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கத் தேவையில்லை என்று தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரினர்.
Recommended Video

சாட்சியங்களை அழித்து விடுவார்
ஆர்யன் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது பொய்யான வழக்கு என்பவரும் அவரை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று வாதிட்டார். அப்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவின் வழக்கறிஞர், "ஆர்யன் கான் அவருடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் அர்பாஸ் என்பவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்குவார். சோதனையின்போது அவரிடம் இருந்து (அர்பாஸ் ) ஆறு கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டது. அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் ஜாமீன் அளிக்கப்பட்டால், அவர் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது. இது வழக்கு விசாரணையைக் கடுமையாகப் பாதிக்கும்.

சர்வதேச போதைப் பொருள் நெட்வொர்க்
மேலும், ஆர்யான் கானுக்கு சர்வதேச போதைப் பொருள் நெட்வொர்க்கில் இருப்பவர்களுடன் தொடர்பு உள்ளது. ஆர்யன் கானுக்கும் அவருடன் கைது செய்யப்பட்ட அர்பாஸுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்கள் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு விதிகளை மீறியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் போதைப் பொருள் சப்ளே செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சர்வதேச போதைப் பொருள் நெட்வொர்க்கில் இருப்பவர்கள். இப்படி போதைப் பொருள் சப்ளே செய்பவர்கள் அனைவரும் அங்கே இருந்ததால், ஆர்யான் கானிடம் எந்தவொரு போதைப் பொருளும் இல்லை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று வாதிட்டார்.

ஒத்தி வைப்பு
சொகுசு கப்பலில் ரெய்டு நடைபெற்ற போது பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். போதைப் பொருள் போலீசார் கைது செய்த போது, ஆர்யன் கானிடம் போதைப் பொருள் எதுவும் இல்லை என்பதே அவரது சார்பில் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் வாதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications