மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்தின்போது மேடையில் பேசி கொண்டிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. அதில் நிதின் கட்கரி போட்டியிட்ட நாக்பூர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.

இதையடுத்து அடுத்தக்கட்ட தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் சிவசேனா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நிதின் கட்கரி மகாராஷ்டிராவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் யாவட்மால் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று மதியம் நிதின் கட்கரி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது கடும் வெயில் அடித்தது. இதனால் தலைவர்கள் சோர்வடைந்த நிலையில் இருந்தனர். இந்த வேளையில் மேடையில் பேசிய
நிதின் கட்கரி திடீரென்று மயங்கி விழுந்தார். இதை கவனித்த நிர்வாகிகள் உடனடியாக நிதின் கட்கரியை பிடித்தனர். அதன்பிறகு அவருக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நிதின் கட்கரி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன்பிறகு அவர் மீண்டும் தனது பேச்சை தொடங்கினார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபற்றி நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛புஷாத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடும் வெப்பம் காரணமாக மயங்கினேன். நான் இப்போது நலமாக இருக்கிறேன். அடுத்த மீட்டிங்கிற்காக வருட் பகுதிக்கு செல்ல உள்ளேன். உங்களின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மேடையில் நிதின் கட்கரி மயங்கி விழுந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications