க்ளைமேக்ஸ் கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல்.. சிவ சேனா தலைவரை சந்திக்கிறார் கட்கரி
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை இன்று சந்தித்து பேச உள்ளார்.
மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா ஆகியவற்றுக்கு நடுவே அதிகாரத்தை பங்கு பிரித்துக் கொள்வதில் உரசல் ஏற்பட்டதால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை, நிதின் கட்கரி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அயோத்தி தீர்ப்பு வெளியாகும் முன்பாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம் என்று அப்போது மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நிதின் கட்கரி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதில் வல்லவர் என்று அறியப்படுபவர் நிதின் கட்கரி. எனவே அவர் வந்தால் பிரச்சினை சுமூகமாக தீர்ந்து விடும் என்ற எண்ணம் சிவசேனா வட்டாரத்திலும் இருக்கிறது.
எனவே உத்தவ் தாக்கரே உடன் இன்று அவர் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நிதின் கட்கரி இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு இழுபறி நிலையை சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிர அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலை நீடித்து வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வர் பதவி தங்களுக்கு, தேவை என்று சிவ சேனா வலியுறுத்துவதால், பாஜக சிவசேனா கூட்டணி தலைவர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications