உங்க மொத்த பட்ஜெட்டை விட எங்க ராணுவ பட்ஜெட் அதிகம்.. வக்பு போராட்டத்தில் பாகிஸ்தானை விளாசிய ஓவைசி
மும்பை: நீங்க வெறும் அரை மணி நேரம் பின் தங்கி இல்லை. அரை நூற்றாண்டு பின் தங்கியிருக்கிறீர்கள் என்று பாகிஸ்தானை அசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். நீங்கள் மற்றொரு நாட்டிற்குள் சென்று அப்பாவி மக்களை கொலை செய்தால் எந்த ஒரு நாடும் அமைதியாக இருக்காது என்றும் அவர் கூறினார். வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டத்தின்போது இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு கொடுப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானை விமர்சித்த ஓவைசி
முஸ்லீம் அமைப்புகளும் இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்துள்ளன. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒரே குரலில் ஒட்டு மொத்த இந்தியாவும் நிற்பது மொத்த உலகத்திற்கும் இந்தியாவின் ஒற்றுமையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த நிலையில்தான், ஐதராபாத் எம்பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி, பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒவைசி பேசியதாவது:- இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் பாகிஸ்தானிய தலைவர்களை பார்த்து நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் வெறும் அரை மணி நேரம் பின் தங்கி இல்லை. அரைநூற்றாண்டு பின் தங்கியிருக்கிறீர்கள். உங்கள் நாட்டின் மொத்த பட்ஜெட், எங்கள் ராணுவ பட்ஜெட்டிற்கு கூட சமம் இல்லை.
கவாரிஜ்களை விட மோசமானவர்கள்
நீங்கள் மற்றொரு நாட்டிற்குள் சென்று அப்பாவி மக்களை கொலை செய்தால் எந்த ஒரு நாடும் அமைதியாக இருக்காது" என்றார். காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கொலை செய்தவர்கள் மதத்தை கேட்டு சுட்டுக்கொலை செய்தது தொடர்பாக பேசிய ஒவைசி, "நீங்கள் எந்த மதத்தை பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவர்கள். உங்களின் செயல்பாடு ஐஎஸ் பயங்கரவாதிகளை விட மோசமாக உள்ளது.
பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே இந்தியாவை குறி வைத்து பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி உடனே எடுக்க வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்றுதான் காஷ்மீர் மக்கள் விரும்புகிறார்கள். தொலைக்காட்சி சேனல்களில் சில தொகுப்பாளர்கள் காஷ்மீர் மக்களுக்கு எதிராக பேசுகிறார்கள்.
வெட்கமாக இல்லையா?
அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? காஷ்மீர் நமது நாட்டின் ஒரு அங்கமாக இருந்தால் அது தொடர்ந்து அப்படியே இருக்கும். எனவே காஷ்மீர் மக்களும் இந்தியாவின் ஒரு அங்கத்தினரே. அவர்களை எப்படி சந்தேகிக்க முடியும். பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு ஒரு காஷ்மீரிதான் உயிரை தியாகம் செய்து இருக்கிறார். காயப்பட்ட குழந்தையை முதுகில் தூக்கி கொண்டு 40 நிமிடங்கள் நடந்தே சென்று உயிரை காப்பாற்றியதும் ஒரு காஷ்மீரிதான்" என்றார் .
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வக்பு சட்டத்திற்கு எதிராக மகராஷ்டிராவில் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஓவைசி கலந்து கொண்டு பேசுகையில், பாகிஸ்தானை கடுமையாக விளாசினார்.













Click it and Unblock the Notifications