ஹிஜாப் அணிந்த பெண்.. இந்தியாவின் பிரதமராவார்! ஆருடம் சொன்ன அசாதுதீன் ஓவைசி! பாஜக பயங்கர ரியாக்ஷன்
மும்பை: இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது பரப்பப்படும் வெறுப்பு அரசியல் முடிவுக்கு வரும் என்றும், ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் என்றும் அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மகாராஷ்டிராவின் சோலாப்பூரில், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மேலும் பேசியதாவது, "பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே நாட்டின் பிரதமர் அல்லது தலைவராக முடியும் என்று கூறுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படி கிடையாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த நமது அரசியலமைப்பு, எந்தவொரு குடிமகனும் பிரதமர், மாநில முதல்வர் அல்லது மேயர் கூட ஆகலாம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

நானும் இன்றைய தலைமுறையும் இல்லாத ஒரு நாள் வரும். இறைவனின் அருளால், அன்று ஒரு ஹிஜாப் அணிந்த மகள் இந்தியாவின் பிரதமராக ஆவார். முஸ்லிம்களுக்கு எதிராக நீங்கள் பரப்பும் வெறுப்பு நீடிக்காது என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடுமையாக ரியாக்ஷன் செய்திருக்கிறார்கள். பாஜக எம்.பி. அனில் போண்டே, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அடிமைத்தனம் எனவும், அதை யாரும் விரும்பாததால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் எனவும் தெரிவித்தார். ஈரானில் பெண்கள் இந்த நடைமுறைக்கு எதிராகப் போராடி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் மக்கள் தொகை சமநிலையற்ற தன்மை அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்த போண்டே, இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, "ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார் என்று ஓவைசி கூறுகிறார். ஓவைசி, அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடுக்கவில்லை, ஆனால் நீங்கள் முதலில் ஒரு பஸ்மண்டா முஸ்லிமையோ அல்லது ஹிஜாப் அணிந்த ஒரு பெண்ணையோ உங்கள் கட்சியின் தலைவராக்குங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications