பிரதமர் மோடி ஒரு போராளி.. காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார்.. மேடையில் உரக்க சொன்ன ரஜினிகாந்த்
மும்பை: ‛‛பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார். காஷ்மீர் விவகாரத்தை தைரியமாகவும், அழகாகவும் மோடி கையாள்வார்'' என்று பல்வேறு பிரபலங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி மீது நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை வைத்து பேசினார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் WAVES மாநாடு என்பது இன்று தொடங்கியது. இந்த மாநாடு மொத்தம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாடு என்பது மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் லிபரப்பு துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் தாக்குதல் பற்றியும், அதனை பிரதமர் மோடி கையாள்வது பற்றியும் கருத்து தெரிவித்தார்.அப்போது பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். பிரதமர் மோடி மீண்டும் காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார் என்று ரஜினிகாந்த் கூறினார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: WAVES மாநாட்டை அரசு தள்ளிவைக்கும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். தற்போதைய சமயத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் என்பதால் நிகழ்ச்சி தள்ளிப்போகும் என்று கூறினார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடியின் மீதான நம்பிக்கையால் குறித்த நாளில் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று உறுதியாக நம்பினேன். இப்போது நடந்து விட்டது.
பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். இதனை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நாம் அவரை பார்த்து கொண்டே இருக்கிறோம். காஷ்மீர் தாக்குதலை அவர் தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது காட்டுமிராண்டித்தனமானது. இரக்கமற்றது. காஷ்மீரில் அமைதியை கொண்டு வந்து நாட்டின் புகழ்பெற வைப்பார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதின் நான் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று கூறினார்.
அதாவது தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர் கப்பல்களை நம் நாடு தயாராக வைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். முப்படைகளுக்கும் பிரதமர் மோடி சுதந்திரம் வழங்கி உள்ளார். இதனால் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியை நம் படை வீரர்கள் உரிய நேரத்தில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசி உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications