அதானி ஊழலில் மோடி “லிங்க்”.. புதிய குண்டை போட்ட ராகுல் காந்தி! பிரதமர் தனக்கு பயப்படுவதாக பேச்சு
மும்பை: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக மும்பை வந்து உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அதானி குழும முறைகேடுகளில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக பகீர் கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்திய தொழில் நிறுவனங்கள் சமமாக போட்டியிடுவதற்காக வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அதானி குழுமத்தின் முறைகேடு தொடர்பாக ஓசிசிஆர்பி என்ற கூட்டமைப்பு பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறது. பிரபல சர்வதேச பத்திரிகைகளான பினான்சியல் டைம்ஸ் மற்றும் கார்டியன் ஆகியவை அதானி குழுத்தின் முறைகேடுகள் பற்றி விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

சட்டவிரோதமாக ரூ.1000 கோடி இந்தியாவில் இருந்து சென்று அதானி குழுமத்தின் மூலமாக முறைகேடான முறையில் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டு இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் யாருடைய பணம்? முறைகேடாக அதானி குழுமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ததில்
கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
வினோத் அதானி மட்டுமல்ல, சீனாவை சேர்ந்த நாசர் அலி மற்றும் சாங் சுங் லிங்க் ஆகிய 2 பேரும் அதானி குழுமத்தின் முறைகேடுகளில் முக்கிய பங்காக இருந்து இருக்கிறார்கள். அதானி குழுமத்தில் முறைகேடு நடந்து உள்ளது தெளிவாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் மட்டும் இந்தியாவில் இருந்து பணத்தை வெளியே அனுப்பி, அதன் பின்னர் அதே பணத்தை வைத்து சொத்துக்களை வாங்குகிறார்.
அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் கொடுக்க வேண்டும். இந்தியாவின் மதிப்பை உலகளவில் உறுதி செய்யும் ஜி 20 மாநாட்டிற்காக பல தலைவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த நேரத்தில் இது தொடர்பாக வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
இது தொடர்பாக வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்த தவறினால் ஜி 20 மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்கள் அது பற்றி கேள்வி எழுப்பும் நிலை வரலாம். சர்வதேச ஊடகங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஒரு குடும்பம் அதானி குழுமங்களில் முதலீடு செய்து உள்ளது என சர்வதேச பத்திரிகைகள் குற்றம்சாட்டி உள்ளன.
முறைகேடாக செய்யப்பட்ட முதலீடுகளின் மூலமாக அதானி குழும நிறுவனங்களுடைய பங்குகள் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றன. விமான நிலையங்கள் போன்ற நாட்டின் முக்கிய கட்டமைப்புகளை நிர்வாகம் செய்யும் அதானி நிறுவனத்தில் எப்படி சீனாவை சேர்ந்தவர் முதலீடு செய்கிறார்?
இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தில் சீனாவை சேர்ந்தவர்களின் முதலீடு அனுமதிக்கப்பட்டது எப்படி? செபி அமைப்பில் இருந்து விலகியவர் எப்படி அதானி நிறுவனத்தில் இயக்குநர் ஆனார்? அவர் செபி அதிகாரியாக பதவியில் இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணை என்பது எப்படி இருந்திருக்கும்?
எனவே அதானி குழும முறைகேடுகள் குறித்து புதிதாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த நியமனம் அதானி குழும முறைகேடுகள் பற்றி செபி விசாரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. விசாரணையை அதானியால் தடுத்து இருக்க முடியாது. பிரதமர் மோடி விரும்பாத காரணத்தால் செபி விசாரணை மேற்கொள்ளவில்லை.
அதானி விவகாரம் பற்றி நான் பேசுவதால் பிரதமர் நரேந்திர மோடி அச்சம் அடைந்து இருக்கிறார். அதானியுடன் இருக்கும் நெருக்கத்தால் பிரதமர் மோடிக்கு அவரைப் பற்றி பேசினாலே நடுக்கம் வந்துவிடுகிறது. அதானி குழும முறைகேடுகள் இந்தியாவின் கவுரவத்துடன் தொடர்புடையதாகும். இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications