நபிகள் அவதூறு: மாஜி பாஜக நுபுர் சர்மாவுக்கு நான் சப்போர்ட்... புதிய பஞ்சாயத்தை கூட்டும் ராஜ் தாக்கரே
மும்பை: இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்த அவதூறு விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை தாம் ஆதரிப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கூறியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
டிவி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகம் தொடர்பாக நுபுர் சர்மா அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையானது. இன்று வரை இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

நுபுர் சர்மாவின் விமர்சனத்துக்காக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசு மன்னிப்பு கேட்கவும் அந்த நாடுகள் வலியுறுத்தின. இதனையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் நுபுர் சர்மா கருத்தால் வன்முறைகள் வெடித்தன. ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்த டைலர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் நாடு கொந்தளிப்படைந்தது. நுபுர் சர்மா தொடர்பாக உச்சநீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கடந்த வாரம் உ.பி.யில் தீவிரவாதி ஒருவர் பிடிபட்டார். அதேநேரத்தில் ரஷ்யாவில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தற்கொலை தாக்குதல் நடத்த பதுங்கி இருந்த ஐஎஸ் பயங்கரவாதி சிக்கினார்.
இந்நிலையில்தான் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, தாம் நுபுர் சர்மாவை ஆதரிக்கிறேன் என அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக ராஜ் தாக்கரே கூறியதாவது: நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். நுபுர் சர்மாவின் கருத்து புதியதும் அல்ல. ஜாகிர் நாயக் ஏற்கனவே கூறியதைத்தான் நுபுர் சர்மா கூறினார். ஆனால் ஜாகிர் நாயக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று யாருமே கூறவில்லையே ஏன்? ஓவைசி கூட இந்து கடவுள்களை இழிவுபடுத்திதான் பேசி வருகிறார்.
பால்தாக்கரே உயிருடன் இருந்த போது சிவசேனாவில் நான் இருந்த காலத்தில் எந்த கட்சி அதிக எம்.எல்.ஏக்களை வைத்திருக்கிறதோ அந்த கட்சிதான் முதல்வர் பதவியை பெற முடியும் என்கிற நிலைப்பாட்டை வைத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டை ஏன் மாற்றிக் கொண்டார் உத்தவ் தாக்கரே? மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின் போது, தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முடிவு செய்தனர். அப்போது உத்தவ் தாக்கரே எதிர்க்காதது ஏன்?. இவ்வாறு ராஜ்தாக்கரே கூறினார்.












Click it and Unblock the Notifications