புஷ் அப்ஸ், வாக்கிங், ரன்னிங்.. தீவிர பயிற்சியில் மகாராஷ்டிர காங். தலைவர்கள்..எல்லாம் இதற்குதானாம்!
மும்பை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி 7-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வர உள்ளதால், ராகுல் காந்திக்கு இணையாக ஓடுவதற்கும், நடப்பதற்கும் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்கள் புஷ் அப்ஸ், வாக்கிங், ரன்னிங் என தீவிர உடற் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் பயணம் வரை பாத யாத்திரையாக செல்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தனது பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை
தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை சென்றார். இதையடுத்து, ஆந்திரா சென்ற ராகுல் காந்தி தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். பாத யாத்திரையின் போது தினமும் பல கி.மீட்டர்கள் தொலைவுக்கு நடந்தே ராகுல் காந்தி செல்கிறார்.

ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை
ராகுல் காந்தியுடன் அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் என கட்சியினரும் தொண்டர்களும் நடந்து செல்கின்றனர். ராகுல் காந்தி சில நேரங்களில் ஓட்டமும் நடையுமாக செல்வதால் அவருக்கு ஈடு கொடுத்து நடக்க காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் சிரமப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தெலுங்கானாவில் பாத யாத்திரை சென்று கொண்டிருக்கும் ராகுல் காந்தி வரும் நவம்பர் 7 ஆம் தேதி மகராஷ்டிர மாநிலம் செல்கிறார்.

ராகுலுடன் நடப்பதற்காக தீவிர பயிற்சி
மகாராஷ்டிராவின் நாந்தெட் மாவட்டம் தெக்லுர் வழியாக ராகுல் காந்தியின் பாத யாத்திரை மகாராஷ்டிர மாநிலத்திற்கு வருகை தருகிறது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதற்காக மகராஷ்டிர காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பயிற்சியை தொடங்கியிருக்கிறார்களாம். கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியில் ஈடுபடுவது போல மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்காக பயிற்சியை தொடங்கியிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சுவாரசியமாக பேசப்பட்டு வருகிறது.

382 கி.மீ. நடக்கிறார்
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் இது பற்றி கூறுகையில், ராகுல் காந்திக்கு ஈடாக நடந்து செல்வதற்காக புஷ் அப் உள்ளிட்ட பல்வேறு வார்ம் அப் உடற்பயிற்சிகளை தொடங்கியிருப்பதாக கூறினார். மேலும், மகராஷ்டிர மாநிலத்தில் 382 கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தியின் பாத யாத்திரையாக செல்கிறார். இந்த மொத்த தொலைவுக்கும் நானும் நடக்க இருக்கிறேன் என்று நானா படோல் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் 14 நாட்கள்
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 15 தொகுதிகள், 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை செல்கிறது. மொத்தம் 14 நாட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நடப்பதாகவும் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications