“போய் வாருங்கள்.. என் கலங்கரை விளக்கமே”.. ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடு உருக்கம்!
மும்பை: ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவரது நெருக்கமான உதவியாளரும், டாடா அலுவலகத்தின் பொது மேலாளருமான சாந்தனு நாயுடு உருக்கமான இரங்கல் குறிப்பைப் பகிர்ந்துள்ளார். "அன்பின் விலை துக்கம்தான். சென்று வாருங்கள், எனது கலங்கரை விளக்கமே!" எனப் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார் சாந்தனு நாயுடு.
கடந்த சில ஆண்டுகளாகவே, டாடா சன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுடன் எப்போதுமே ஒரு இளைஞர் நெருக்கமாக காணப்பட்டு வந்தார். ரத்தன் டாடாவின் தனி உதவியாளராக, சிரித்த முகத்துடன் பணியாற்றி வந்தார் சாந்தனு நாயுடு எனும் 30 வயது இளைஞர். ஒரு பணியாளர் - முதலாளி இடையேயான உறவைப் போல இல்லாமல், தனது தோழனைப் போலவே தோளில் கை போட்டு, ரத்தன் டாடாவை மகிழ்ச்சிகரமாக கவனித்து வந்தார் சாந்தனு நாயுடு.

சாந்தனு நாயுடு: புனேவில் பிறந்த சாந்தனு நாயுடு, சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். கார்னெல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்ர். சாந்தனு நாயுடு, இன்ஜினியரிங் முடித்துவிட்டு டாடாவில் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றினார்.
ரத்தன் டாடாவை போலவே சாந்தனு செல்லப் பிராணிகள் மீது அன்பு கொண்டவர். சாலை விபத்துகளில் தெரு நாய்கள் பலியாவதை தடுக்க ஒரு திட்டத்தை அவர் செயல்படுத்தினார். நாய்களுக்கு ரிஃப்ளக்டிவ் காலர்களை வடிவமைத்து அவற்றின் கழுத்தில் அணிவித்தார். இரவு நேரங்களில் நாய்கள் குறுக்கே வந்தால், ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்த காலர்களை வடிவமைத்திருந்தார் சாந்தனு.
டாடாவுக்கு கடிதம்: அதன் மூலம், ஒரு நாய் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது. இந்தச் செய்தி, டாடா குழுமத்தின் நியூஸ் லெட்டரில் இடம்பெற்ற நிலையில், பலரும், தங்கள் நாய்களுக்கு இந்த காலர்களை செய்து தரும்படி சாந்தனுவிடம் கேட்டனர். அப்போது, அதை அதிக எண்ணிக்கையில் செய்வதற்கான போதிய பணம் தன்னிடம் இல்லாத நிலையில், அது பற்றி ரத்தன் டாடாவுக்கு கடிதம் எழுதினார் சாந்தனு.

நாய்கள் மீதான ரத்தன் டாடாவின் பிரியம் அனைவரும் அறிந்ததே. சில நாட்களில் ரத்தன் டாடாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. இந்தியாவின் மிக மூத்த தொழிலதிபரான ரத்தன் டாடா, இருபதுகளில் இருக்கும் துடிப்பான இளைஞரான சாந்தனுவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அப்போது தான் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.
டாடாவின் உதவியாளர்: அதன் பிறகு, ரத்தன் டாட்டாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது தனி உதவியாளராகப் பொறுப்பேற்றார் சாந்தனு நாயுடு. வயதானவர்களை கனிவுடன் பார்த்துக்கொள்ள குட் ஃபெல்லோஸ் என்ற ஸ்டார்ட் அப்பையும் நடத்தி வருகிறார் சாந்தனு. அதில் ரத்தன் டாடாவும் முதலீடு செய்துள்ளார். சாந்தனு மீது அந்த அளவுக்கு பிரியம் காட்டினார் ரத்தன் டாடா.
உருக்கம்: இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவு, அவரது அணுக்கத் தொண்டனாக இருந்த சாந்தனு நாயுடுவை கலங்க வைத்துள்ளது. லிங்க்ட் இன் பக்கத்தில் சாந்தனு நாயுடு பகிர்ந்துள்ள இரங்கல் குறிப்பில், "டாடா உடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். அன்பின் விலை துக்கம்தான். சென்று வாருங்கள், எனது கலங்கரை விளக்கமே!" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ரத்தன் டாடாவுடன் தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் சாந்தனு நாயுடு. ரத்தன் டாடா உடனான தனது வாழ்க்கை அனுபவங்களை "I Came Upon a Lighthouse: Short Stories of Life with Ratan Tata" என்ற பெயரில் புத்தகமாகவும் எழுதியுள்ளார் சாந்தனு. வயது வேறுபாடற்ற இந்த நட்பின் ஆழம் மகத்தானது.












Click it and Unblock the Notifications