அப்பாடா, நிம்மதி.. ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இன்று தனது ரெப்போ விகிதத்தை அறிவிக்கவிருந்ததால் காலை முதல் நிதித்துறையினர் நடுவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான 6 நபர்கள் கொண்ட நிதி கொள்கை கமிட்டி தனது கொள்கையை இன்று மதியம் அறிவித்தது.
இதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 6.50% என்ற தற்போதைய நிலையிலேயே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25% சதவீதமாகவும் தொடரும் . ஆனால், பணப்புழக்கத்தினை அதிகரிக்க உதவும் எஸ்.எல்.ஆர் எனப்படும் ஸ்டேச்சுவரி லிக்விடிட்டி ரேஷியோ (Statutory liquidity ratio) 19.5 சதவீதத்திலிருந்து 18.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2018-19ம் நிதியாண்டில், இது ரிசர்வ் வங்கியின் 5வது நிதி கொள்கையாகும். ரிசர்வ் வங்கியின் ரெப்போ தொடர்பான முடிவிற்கு 6 உறுப்பினர்களுமே ஒருமித்த ஆதரவு அளித்துள்ளனர்.
இவ்வாண்டில் இதுவரை இருமுறை ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதம் 25 அடிப்படை புள்ளிகளும், ஆகஸ்டில் மேலும் 25 அடிப்படை புள்ளிகளும் உயர்த்தப்பட்டன.
ரெப்போ வட்டி விகிதத்தினைப் போன்றே நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதமும் ஏற்கனவே கூறியபடி, 7.4% சதவீதமாகவே தொடரும் என்று கணித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை என்பதால், வங்கிக் கடன் மற்றும் நிரந்தர டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் மாற வாய்ப்பு இல்லை.