"மொத்தம் 50!" அதில் 40 சிவசேனா.. அப்போ மற்ற 10 எம்எல்ஏக்கள் எந்த கட்சி? பொடி வைத்து பேசும் ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிர கூட்டணி அரசுக்கு கிளைமேக்ஸ் நெருங்கும் நிலையில், ஷிண்டே சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அரசியல் குழப்பம் இப்போது கிளைமாக்ஸை எட்டி உள்ளது. அதிருப்தி அமைச்சர் ஷிண்டேவின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் இப்போது அமைந்துள்ள கூட்டணி அரசு கவிழும் சூழல் உருவாகி உள்ளது. எப்போது கவிழும் என்பதே ஒரே கேள்வியாக உள்ளது

ஷிண்டே
முதலில் 15 முதல் 20 அதிருப்தியாளர்கள் உடன் ஷிண்டே தலைமறைவானதாகச் சொல்லப்பட்டது. சூரத்தில் இருந்த அவர்கள் சில மணி நேரத்தில் அசாம் கவுகாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருந்து கொண்டே சிவசேனா அரசுக்கு குடைச்சல் கொடுத்து வந்தார் ஷிண்டே! என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி முரணானது என்றும் அதைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் ஷிண்டே தரப்பு கூறுகிறது.

தாக்கரே
இந்தப் பிரச்சினை தொடங்கிய போது ஆளும் தரப்பு இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்கள், தலைமறைவானவர்கள் எவ்வித கோரிக்கையும் இல்லாமல் திரும்ப வந்துவிடுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தார். ஆனால் சில மணி நேரங்களில் நிலைமை தலைகீழானது. கடைசியில் 24 மணி நேரத்தில் திரும்பினால் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றது தாக்கரே தரப்பு!

ஆதரவு
இருப்பினும், இதற்கெல்லாம் ஷிண்டே அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. தேவையான பலம் இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் தாக்கரே தரப்பில் இருந்து கூறும் கருத்துகளுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று வரை ஷிண்டே தரப்பிற்குத் துல்லியமாக எத்தனை பேரின் ஆதரவு இருக்கிறது எனத் தெரியாமலேயே இருந்தது. நேற்று சுமார் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உடன் படத்தை வெளியிட்டு இருந்தார் ஷிண்டே.

மொத்தம் 50 எம்எல்ஏக்கள்
இது தாக்கரே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அமைந்துள்ளது. இதற்கிடையே சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக ஷிண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "மொத்தம் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களில் 40 பேர் சிவசேனா எம்எல்ஏக்கள். மற்றவர்கள் இதர கட்சியைச் சேர்ந்தவர்கள்.

விலகவில்லை
நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் செயலில் நம்பிக்கை கொண்டவர்கள் எங்களுடன் சேர்வார்கள். பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம், அதை விரும்புபவர்கள் வருவார்கள். நாங்கள் யாருமே பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனாவை விட்டு வெளியேறவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

சட்ட விரோதம்
தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது குறித்து சிவசேனா எடுத்து நிலையில், இந்த நடவடிக்கையை "சட்டவிரோதமானது" என்று ஷிண்டே தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இது சட்டவிரோதமானது.. இந்த நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஜனநாயகத்தில் பெரும்பான்மையான மக்களின் எண்ணம் முக்கியம். அதைப் பிரதிபலிக்கும் நம்பர்களை நாங்கள் கொண்டுள்ளோம். ஜனநாயகத்திற்கு இது முக்கியம். அவர்கள் செய்வது சட்டவிரோதமானது. அவர்களால் சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுக்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications