ரெட் அலர்ட்.. வெள்ள நீரில் மிதக்கும் மும்பை... கொட்டி தீர்த்த கனமழை.. கோவாவிலும் மழையால் மக்கள் அவதி
கோவா, மும்பைக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மும்பை: மும்பை, கோவாவுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இடியுடன்கூடிய கனமழை மேலும் தொடரும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது..
அசாம் மாநிலத்தில் கடந்த ஜுன் 13-ம் தேதி முதல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது...
கோடைக்கு இதமாக சென்னையில் கனமழை.. போண்டா, டீயுடன் கொண்டாடிய மக்கள்!
ரயில் சேவைகள்
இதனால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள மக்கள் வெள்ளத்தால், மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.. இமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள சோஜ் நுல்லா என்ற கிராமத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்ட நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... இதன் காரணமாக சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும் இதுவரை 6 பேர் காணாமல் போயுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்தார்.
தமிழகம்
மேலும் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.. பார்வதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சில முகாம் இடங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.. அதே போல, தமிழகத்திலும் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. முக்கியமாக, நீலகிரி மாவட்டத்தில் கனமழை விடாமல் பெய்கிறது.. ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை இங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இதனிடையே, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்பதால் 2 நாட்களுக்கு முன்பேயே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் பல தண்ணீரில் தத்தளிக்கின்றன.. இதில், மும்பையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகள், முக்கிய சாலைகள், ரயில்வே ஸ்டேஷன்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
தானேவில் மழைநீர் தேங்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் பள்ளத்தில் வண்டியுடன் விழுந்து, அவர் மீது பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனமழை தொடர்வதால் ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் சில இடங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை
இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது வரும் வெள்ளிக்கிழமை வரை மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரித்திருந்த நிலையில், இடி, மின்னலுடன் மிக கனமழை மேலும் நீடிக்கும் என்று அறிவித்துள்ளது.. இதனால் மும்பை, கோவாவில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மேலும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாக மழை குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.