சீக்கிரமே வரப்போகுது.. குட் நியூஸ் சொன்ன கங்கனா ரனாவத்.. என்னன்னு பாருங்க
மும்பை: பலகட்ட தடங்கலுக்குப் பின் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடித்து வெளியாகவுள்ள எமர்ஜென்சி திரைப்படத்தின் ரீலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2006 ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதுவரை 4 தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் பாஜக எம்பியாக உள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மணிகர்னிகா - ஜான்சி ராணி படத்தை கிறிஸ் ஜகர்லாமுடியுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு இயக்கினார். அதைத்தொடர்ந்து, நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தை முழுக்க முழுக்க கங்கனா ரனாவத்தே இயக்கி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்துக்கு எமர்ஜென்சி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்த போது நிகழ்ந்த சம்பவங்கள், அரசியல் நடவடிக்கைகள், இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது நிகழ்ந்த சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளன. இந்த திரைப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரீலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து பஞ்சாபில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்தது. அதனால், சென்சார் போர்டில் இருந்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற உத்தரவால் எமர்ஜென்சி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திரா காந்தி கொலை, பிந்திரன்வாலே, பஞ்சாப் கலவரம் போன்ற சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்தக் கூடாது என்று தங்களுக்கு மிரட்டல் வருவதாகவும், படத்தில் என்ன காட்சிகள் வருகிறது என்ற கேள்விகளும் பலமாக எழுவதாகவும், எதையும் என்னால் நம்ப முடியாத தருணமாக உள்ளது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று அண்மையில் கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, மும்பை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தணிக்கை குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் கங்கனாவும் அதனை ஏற்றுக் கொண்டு படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், எமர்ஜென்சி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் பொறுமைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications