எந்த காங். எம்எல்ஏவை காணவில்லைனு சொல்லுங்க... பேச வைக்கிறேன்... வதந்திகளால் சீறிய சிந்தியா
குவாலியர்: மத்திய பிரதேசத்தில் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக வெளியான செய்திகளை ஜோதிராதித்யா சிந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தி நாளிதழின் லக்னோவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தமது ட்விட்டர் பக்கத்தில், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரை 2 நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என பதிவிட்டார். இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அந்த பத்திரிகையாளர் தம்முடைய பதிவு 1 மணிநேரத்தில் நீக்கிவிட்டார். ஆனால் இத்தகவல் காட்டுத் தீ போல சமூக வலைதளங்களில் அதுவும் ரெக்கை கட்டி பறந்தது.
ஏற்கனவே சிந்தியா தமது ட்விட்டர் கணக்கில் காங்கிரஸ் தொடர்புடைய விவரங்களை நீக்கியிருந்தார். இதனால் அத்தனைக்கும் கண், காது, மூக்கு வைத்து வதந்தி தீயாக பரவியது.
இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த சிந்தியா, என்னுடைய ட்விட்டர் கணக்கு நீளமாக இருக்கிறது என்பதற்காக சுருக்கினேனே தவிர வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் காணாமல் போகவும் இல்லை.
அப்படி ஏதேனும் காணாமல் போன ஒரு எம்.எல்.ஏ. வின் பெயரை சொல்லுங்கள்.. உடனே அவரை பேச சொல்லுகிறேன். இது எல்லாமே வதந்திதான் என்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிந்தியா.