ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்.. பெரிய ஆப்பாக வைத்த அதிபர் டிரம்ப்!
மும்பை: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்த சூழலில், அது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. வரலாறு காணாத அளவுக்கு பங்குச்சந்தைகள் மிக மோசமாகச் சரிவை சந்தித்துள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் இந்திய முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்கப்போவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். ஒருவழியாக கடந்த வாரம் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தது முதலே சர்வதேச பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வந்தன. இதற்கிடையே இன்றைய தினம் பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மோசமாக மாறியுள்ளது.

பல டிரில்லியன் டாலர் இழப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகள் சர்வதேச அளவில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கும் பங்குச்சந்தைகள் மிக மோசமாகச் சரிந்து வருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் உலகெங்கும் முதலீட்டாளர்கள் பல டிரில்லியன் டாலரை இழந்துள்ளனர். மேலும், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக சரிந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள்
இன்று காலை முதலே மும்பை பங்குச்சந்தை குறியீடு என் சென்செக்ஸ் சரிந்தே வருகிறது. மதியம் 1 மணியளவில் அது 3,157 புள்ளிகள் சரிந்து 71,207க்கு வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 1,025 புள்ளிகள் குறைந்து 21,880க்கு வர்த்தகமாகி வருகிறது. இதர ஆசிய பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளிலும் அதே நிலை எதிரொலிக்கிறது.
குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் அனைத்து துறைகளுமே கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. நிஃப்டி மெட்டல் குறியீடு 8% சரிந்துள்ளது.. ஐடி பங்குகள் 7% க்கும் அதிகமாக சரிந்தன. ஆட்டோமொபைல் துறை, ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் & எரிவாயு துறை பங்குகள் என அனைத்துமே 5 சதவிகிதத்திற்கு மேல் சரிந்தன. மேலும் ஸ்மால் கேப் எனப்படும் சின்ன நிறுவனங்களின் பங்குகள் 10% மேல் சரிந்துள்ளன. மிடியம் கேப் பங்குகள் 7.3% வரை சரிந்தன.
ரூ.19 லட்சம் கோடி மாயம்
இப்படி பாரபட்சமே இல்லாமல் அனைத்து பங்குகளும் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் மும்பை பங்குச்சந்தையில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். அதாவது மும்பை பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி சரிந்துள்ளன. அதேநேரம் இந்த ரூ.19 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் எனக் கருத முடியாது. முதலீட்டாளர்கள் பங்குகளின் மதிப்பு சரிந்தாலும், அதை விற்றால் மட்டுமே அவர்களுக்கு நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் இயக்குநர் கிராந்தி பதினி கூறுகையில், "இவை அனைத்தும் எதிர்பாராத நிகழ்வுகள். டிரம்பின் வரியால் ஆசியா பசிபிக், ஜப்பான், ஹாங்காங் என அனைத்து பங்குச்சந்தைகளும் கடுமையாகச் சரிந்துள்ளன. அப்படி எதுவும் இல்லையே என்று சொல்லி இதை மறைக்க முடியாது" என்றார்.

சர்வதேச பங்குச்சந்தைகள்
டிரம்பின் வரியால் இந்தியா மட்டுமின்றி உலக பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜப்பானின் நிக்கேய் 7% சரிந்துள்ளது. தென் கொரியாவின் கோஸ்பி 5%, சீனாவின் புளூ-சிப் குறியீடு 7%, ஹாங்காங்கின் ஹேங் செங் 10.5% சரிந்துள்ளது. ஆசிய நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கப் பங்குச்சந்தைகளும் சரிந்து வருகிறது. அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குகள் 4% சரிந்துள்ள நிலையில், எஸ்&பி 500 குறியீடு 3.1% சரிந்துள்ளன.
உலகளவில் பங்குச்சந்தைகள் இந்தளவுக்குச் சரிந்தாலும் கூட டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை. சர்வதேச அளவில் நிலைமை சமாளிக்க டிரம்ப் எதாவது அறிவிப்பை வெளியிட வேண்டும் என வல்லுநர்கள் குறிப்பிட்டாலும், டிரம்ப் அதைக் கேட்பதாக இல்லை. தனது மருந்து இப்போது தான் வேலை செய்ய ஆரம்பித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் காலங்களில் பங்குச்சந்தைகள் மேலும் சரியும் என்றே அஞ்சப்படுகிறது.
கொரோனாவுக்கு பிறகு இதுதான் மோசம்
கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இந்தளவுக்கு மோசமாகச் சரிவது இதுவே முதல்முறை. இது தொடர்பாக ஜியோஜித் ஃபைனான்சியல் வல்லுநர் வி.கே.விஜயகுமார் கூறுகையில், "இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.. பங்குச்சந்தை கடுமையாகச் சரிகிறது. அதேநேரம் மற்ற ஆசிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்திய பங்குச்சந்தையில் இறக்கம் குறைவாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. இதனால் இந்தியா மட்டும் விதிவிலக்கு இல்லை.
மேலும், ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் வரியால் நமக்கு பெரிய பாதிப்பு இருக்காது. நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2% மட்டுமே என்பதால் பாதிப்பு மோசமாக இருக்காது. மேலும், அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அந்த ஒப்பந்தமும் இறுதியானால் அதுவும் பாசிட்டிவாகவே இருக்கும்" என்றார்.

இந்திய நிறுவனங்களுக்கு லாபமா நஷ்டமா
டிரம்பின் வரி விதிப்பில் அவர் செமிகண்டெக்டர், காப்பர் மற்றும் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
மறுபுறம் ஆட்டோமொபைல் துறைக்கான வரி என்பது இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும். டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அதன் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை அதிகளவில் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. டிரம்பின் வரி விதிப்பால் டாடா மோட்டர்ஸ் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களுக்கும் இந்த வரி பொருந்தும் என்பதால் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.
இது வெறும் தொடக்கம் தான்
அதேநேரம் இது வெறும் தொடக்கம் தான். வரும் நாட்களில் பங்குச்சந்தை மேலும் சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் வரி உள்ளிட்ட காரணங்களால் உலக பொருளாதாரம் எப்படி செல்லும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications