கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிரடி: நாசிக் நகர மார்க்கெட்டுகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள மார்க்கெட்டுகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டம் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே கூறியுள்ளார்.

போட்டு தாக்கும் கொரோனா
இந்தியாவில் சில மாதங்கள் அடங்கி இருந்த கொரோனா மீண்டும் தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. தனமும் 50,000-க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் மட்டும் 80% பாதிப்புகள் உள்ளன. குறிப்பாக மகாராஷ்டிரா முழுவதும் கொரோனா ஆட்சி செய்து வருகிறது என்றே கூறலாம். மகாராஷ்டிராவின் மும்பை, புணே உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

மகாராஷ்டிராவில் அதிகம்
இதனால் அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாசிக் நகரிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.நாசிக்கில் உள்ள மார்க்கெட்டில் மக்கள் மாஸ்க் அணியாமல் பெருமளவில் கூட்டம், கூட்டமாக சென்று வந்ததால் தொற்று மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டது.

மார்க்கெட்டில் நுழைய கட்டணம்
இதனால் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாசிக்கில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நாசிக் நகர நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கட்டணம் விதிக்கப்படுவதன் மூலம் மார்கெட்டுகளில் அதிக அளவு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்று நாசிக் நகர அதிகாரிகள் கூறினார்கள். இது தொடர்பாக நாசிக் போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே கூறியதாவது:- நாசிக்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் வேறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகிறோம்.

கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்
ஒரு மார்க்கெட் பகுதிக்குள் நுழைய ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். லாக்டவுனுக்கும் அவசியம் இருக்காது என்று கூறினார். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,918 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications